அலசுவாரம் - 72
உலக வரலாற்றில் இத்தகையவோர் பின்னடைவு வேறு எந்தத் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்திலும் ஏற்படவில்லை. ஏற்படவும் கூடாது. பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதிகள் அடக்கியொடுக்கப்பட்டர்கள் ஆனாலும் அவர்களுக்கென ஆளும் அரசொன்றிருக்கிறது. அதற்கும் மேலாய் இந்திய நடுவண் அரசின் பிரதம மந்திரியாகவே சீக்கியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் எத்தனையோ பிரமிக்கத்தக்க தியாக வேள்விகளைச் செய்து தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்பிய நமக்கோ ஒரு பிடி மண்தானும் நமதென்று சொல்லிக்கொள்ளக் கிடைக்கவில்லை. எல்லாமே பொய்யாய்க் கனவாய் புனைகதையாய்ப் போய்விட்டது.
சமீபத்தில் நாட்டைவிட்டும் பிறகு வந்து வீட்டைவிட்டும் வெளியில் இருக்கவேண்டி ஏற்பட்டதால் இந்தத் தொடரைச் சற்று இடைநிறுத்த வேண்டியேற்பட்டுவிட்டது. இனி மீண்டும் தொடரலாமென நினைக்கிறேன்.
எதிர்வரும் நாட்களில் நமது மாவீரர்களை நினைவுகூரும் தேசிய எழுச்சி வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. சென்ற ஒரு வருடத்திற்குள் நமது தேசத்தின் விடுதலைக்காக உழைத்த இரண்டு பிரதான குரல்கள் அடங்கி விட்டன. முதலில் பாலா அண்ணையின் குரல் இயற்கையின் கோரப்பிடியால் அடக்கப்பட்டது. சமீபத்தில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனை சிங்கள அரசு தனது வழiமையான வஞ்சனையினால் கொன்றது. பல மாவீரர்களும் மறைந்துவிட்டார்கள்.
மட்டக்களப்பு மாந்திரீகத்தைப் பற்றி எழுதும்போது பலவிடயங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. அதுபற்றிய மேலும் சில சுவராசியமான செய்திகளை விட்டு விட்டு இத்தொடரை வேறு ரிசைக்குக் கொண்டு செல்ல மனம் இடம் தரவில்லை. அதனால் தொடர்கிறேன். இவை அனைத்தும் நான் நேரில் கண்டு கேட்டு அறிந்துகொண்ட விடயங்கள்.
சென்ற முறை மட்டக்களப்பு மாந்திரீகத்தைப் பற்றி எழுதினேன் அது பற்றிய விபரங்களைத் தொடர்கிறேன். எங்கள் ஊரில் கந்தசாமியென்று ஒரு பூசாரி இருந்தார். அவர் கடும் மந்திரவாதியென்று எல்லோருக்கும் தெரியும். உடலெங்கும் மூன்று கோடிட்ட திரிபுண்டரம் எனப்படும் திருநீற்றுப் பூச்சோடு வேட்டியும், மேலாடையில்லாமல் ஒரு துண்டும் போட்டுக்கொண்டு திரிவார். மிகவும் சாந்தமானவர். எப்போதும் சிரித்த முகத்தோடுதான் இருப்பார். அவர் ஓரு சேட்டையோ அல்லது பெனியனையோ போட்டு நான் பார்த்ததில்லை. பளிச்சென்ற வெள்ளை உடம்பு. கோயில் ஐயர்மார் போலத்தான் இருப்பார். மரக்கறிதான் சாப்பிடுவாராம் என்று சொல்வார்கள்
~மட்டைக்கிளப்பானடா மாடுதின்னி…டட்டடா…..
மந்திரவாதியடா மகனே கவனமடா|
சென்றமுறை மட்டக்களப்பின் உணவுப்பழக்கத்தை எழுதத் தொடங்கினேன் இப்போது இந்தப் பாடல் ஞாபகத்துக்கு வருகின்றது. படிப்பித்து ஆளாக்கி கொழுத்த சீதனத்துக்கும்; - குடும்பத்துக்கு டொணேசனோடும் (பணம்) விற்கப்படத் தயாராயிருக்கும் தன்பிள்ளை மட்டக்களப்பிற்கு வரும்போது அங்கே மாட்டுப்பட்டுவிடக் கூடாது என்கிற நோக்கில் ஓர் வெளிப்பிரதேசத் தாய் அம்மண்ணைப்பற்றிய வெறுப்பையூட்டி எச்சரிக்கை செய்யப் பாடப்படும் பாடல்போலத் தோன்றுகின்றது.
Recent comments
15 hours 56 min ago
2 days 14 hours ago
4 days 15 hours ago
5 days 7 hours ago
6 days 8 hours ago
1 week 14 hours ago
1 week 1 day ago
1 week 2 days ago
1 week 2 days ago
1 week 3 days ago