ஆச்சியிடம் ஒரு கேள்வி ..

எனது பெயர் மாதவன். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். ஏன் இந்த பொடியள் மொட்டாக்கை போட்டுக்கொண்டு எங்களை இப்படி பயமுறுத்துகிறார்கள். இந்த மொட்டாக்கு கலாச்சாரம் எந்த இனத்தவர்களிடம் இருந்து தொடங்கியதோ தெரியாது ஆனால் இப்போ எல்லா இளய சமூகத்தையும் பிடித்து ஆட்டுகின்றது. கீழே விழுந்து விடுமோ என்று பயப்படுகிற மாதிரி ஒரு காற்சட்டை, முடிந்தால் காதில் ஒரு தோடு, நெற்றி, தலை, காது ஒன்றுமே தெரியாத மாதிரி பெரிய ஒரு மொட்டாக்கு. நான் வேலை முடிந்து இரவு தான் வீட்டுக்கு வாறனான். உந்த பத்திரிகை கொட்டை எழுத்து கொலைகளையும், கத்திக்குத்துக்களையும் வாசித்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வரவேண்டி உள்ளது. அதிலும் வரும் போது இந்த மொட்டாக்கு போட்ட பொடியளைக் கண்டால் வயத்தைக்கலக்கும். ஏன் உதுகள் உப்பிடி ஒரு மொட்டாக்கோடு அலையுதுகள்.
ஆச்சி இதுபற்றி உங்களுக்கும் அனுபவம் இருந்தால் சொல்லுங்கோ

ஒரு காலத்தில் பிள்ளைகள் வேண்டாம், வேண்டாம் என்று சொல்ல நாங்கள் ஆண்பிள்ளைக்கு காது குத்தவேண்டும் என்று பிடித்து பலாத்காரமாக கடுக்கன் பூட்டுவது உண்டு. ஏனெனில் உடம்பில் ஒரு குறையிருந்தால் நரபலிக்கு கொடுக்க மாட்டார்கள் என்று ஒரு ஜதிகம் பழையகாலத்தில் உண்டு. ஆனால் இங்கு உங்கள் கதையைக்கேட்டால் இங்கு கடுக்கனைப்பூட்டிக்கொண்டு  நரபலி எடுப்பார்கள் போல் உள்ளது. ஆனால் இந்தக்கதையை கேளுங்கோ. எனது கடைக்குட்டி பேரனுக்கு 16 வயது அவன் வழக்கமாக மொட்டாக்கு பொடியளைக் கூட்டமாகக் கண்டால் றோட்டின் அடுத்தகரைக்கு மாறி நடப்பான். ஆனால் அவன் தனிய தனியார் வகுப்புகளுக்கு போட்டு வரும் போது மொட்டாக்கு போட்டுக்கொண்டுதான் வருவான். ஏன் என்று கேட்டால் அப்போதுதான் தன்னிடம் ஒருவரும் வம்புக்கு வரமாட்டார்கள் என்று சொல்வான். இதைப்பார்த்தால் உண்மையாகவே கடிக்கிறநாய் என்று ஒன்று, இரண்டு இருந்தால் மிஞ்சம் கடிக்கிறநாய்க்கும், சனத்திற்கும் பயந்து குலைக்கிற நாய்களும் உள்ளன. ஆனால் வெளியில் இருந்து பார்த்தால் எல்லாமே நாய் மாதிரித்;தான் தெரியும். ஆனால் இப்பிடி அடையாளச்சின்னங்களுடன் காட்சியளித்தாலும் காவல்துறை சரியான நபரைக் கைது செய்ய மாதங்கள் பல ஆகலாம்!