ஒரு பொம்மலாட்டம் நடக்குது

"பழைய குருடி கதவைத் திறவடி” என்பதுபோல மீண்டும் பேச்சுவார்ததைக்கு இடம், தேதி குறிக்கப்பட்டுள்ளது. நிபந்தனையற்ற பேச்சுக்கு இரண்டுதரப்புமே இணங்கியதாக கூறப்பட்டாலும்,  சிங்கள கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்த தாங்கள் நிபந்தனைகளை முன்வைத்தே பேசுவோம் என சிறிலங்கா அரச தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா அதிபரின் சம்மதமின்றி ஐரோப்பிய ஓன்றியம் இந்த முடிவினை வெளியிட்டிருக்க முடியாது எனினும் போர் முஸ்தீபுகளில் சிங்கள இனவாதிகளை மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருந்த மகிந்தவுக்கு இணைத்
தலைமைநாடுகளின் அழுத்தங்களுக்கு மசிந்து செல்லவது உவப்பான விடயமாகவிருக்காது. பலவழிகளிலும் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்ட இந்த நாடுகள் தமது பொம்மலாட்டத்தின் மூலம் எதைச் சாதிக்க விழைகின்றன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தமிழ் - சிங்கள தரப்புக்குகளுக்குமிடையில் புரிந்துணர்வு அறவே அற்ற நிலையில் இப்போது ஒஸ்லோ நகரில் நடைபெறப்போகிற பேச்சுவார்த்தைகள் என்ன பலனை அளிக்கமுடியும்? யுத்த நிறுத்த உடன்படிக்கை முழுவதுமாகக் கடைப்பிடிக்கப்பட்டு அதன் மூலம் சொல்லொணாத் துயரில் ஆழ்ந்துள்ள தமிழ் மக்களின் உடனடி பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிட்டுமெனில் இந்த பேச்சுவார்ததையில் ஏதாவது அர்த்தம் ஏற்படக்கூடும். மாறாக முன்னரைப்போலவே பேச்சுவார்ததையில் எட்டப்படும் இணக்கப்பாடான விடயங்களைக்கூட நடைமுறை படுத்தமுடியாது போய்விடும் எனின் இது வெறும் கால விரயமாக அமைந்துவிடும். 

சுருங்கி வரும் உலகில்; அதுவும் இலங்கைத்தீவைப்போன்ற குட்டி நாட்டின் உள்விவகாரங்களில் வெளிச்சக்;திகளின் தலையீடு தவிர்க்கமுடியாதது ஆகிவிட்டாலும் அவை மனித அவலத்துக்கு இட்டுச்செல்லக்கூடாது. ஆகக்குறைந்தது சிறிலங்கா அரசை சர்வதேச விதிகளுக்கு அமைவாகச் செய்யற்படுமாறு இணைத்தலமை நாடுகள் அழுத்தங்களை கொடுக்கவேண்டும.; இதனையே தமிழ்மக்கள் வேண்டி நிற்கிறார்கள்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களைப் பொறுத்தவரை, தாயகத்தின் அண்மைக்கால நிலமை அவர்களுக்கு மனமகிழவைத்தரவில்லை என்பதை உணரக்கூடியதாக உள்ளது. இருப்பினும் களத்திலிருந்து வெற்றிச்செய்திகளை மட்டுமே எதிர்பார்த்தபடி காத்திருப்;பதிலோ பின்னடைவுகள் ஏற்படுகின்றபோது மனம் வெதும்பி விமர்சனங்களை முன்வைப்பதிலோ ஆகக்கூடியது எதுவுமில்லை. மாறிவரும் சர்வதேச சூழலுக்கு ஏற்ப உருவாகிவரும் எங்கள் தேசமும் நடக்கவேண்டிய கடப்பாடு உள்ளதை உணரந்து கொண்டு தமிழ் தேசியத்தை பலப்படுத்துவதிலும் அரசியல் ரீதியான செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும்.