ஆச்சியிடம் ஒரு கேள்வி ..

 நான் இந்த நாட்டுக்கு வந்து ஜந்து வருடங்கள் ஆகுகின்றது. எனது கணவர் எனது படத்தைப்பார்த்ததும் என்னைத்தான் கட்டுவேன் என்று ஒற்றைக்காலில் நின்று மணம் புரிந்ததாகச்சொல்வார்கள். என்னைப்பற்றி அதிகம் சொல்ல விருப்பமில்லை ஆனாலும் நான் பார்ப்பவர்களை சுண்டி இழுப்பது போல அழகாக இருப்பேன் என்று மற்றவர்கள் சொல்வார்கள் என்னாலும் அதை அவதானிக்கக் முடிவதுண்டு. எனது கணவருக்கு என் நடத்தையில் ஒரு வித சந்தேகமும் இல்லை. ஆனாலும் நான் தனிய எங்கும் போக முடியாதபடி தானும் எல்லாவற்றுக்கும் துணையாக வருவார். வேலை முடிய மழை கிழை என்று யாரும் என்னுடன் வேலை பார்ப்பவர்கள் எனக்கு காரில் இடம் தந்தவர்கள் என்று சொன்னால் அடுத்த தடவை மழை பெய்யும் போது ஏத்த அவரே வந்து விடுவார். இத்தனைக்கும் எமக்கு இரண்டு வயதில் ஒரு மகன் கூட உள்ளான். இவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார். இவர் அழகில்லை என்றும் இல்லை. ஆண்ணழகன் என்றும் இல்லை. சுமாராக இருப்பார். இவரின் இப்படியான நடத்தைக்கு காரணம் என்ன? இதை எப்பிடி இல்லாது ஒழிக்கலாம்?

இது ஒரு விதமான மனதோடு சம்பந்தப்பட்ட மனநிலை வெளிப்பாடு.
ஓரு குழந்தைப்பிள்ளைக்கு ஒரு அழகான பொம்மையைக் கொடுத்தால் அது அதை ஒருவருக்கும் கொடுக்காமல் தனக்கென்று தனிய வைத்திருக்கும் தன்னுடமைத்தன்மை. அத்தோடு அது எங்கே தொலைந்து போய் விடுமோ, யாரும் தன்னிடம் இருந்து தட்டிப்பறித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்ற பயம், தன்னம்மிக்கைக்குறைவு போன்றனவே இதற்கு காரணமாக இருக்கலாம். இதை போக்குவதற்கு அவரில் இருக்கும் உங்களுக்கு விருப்பமான குணங்களை, தன்மைகளை அவருக்கு எடுத்துச்சொல்லி அவர்மேல் உங்களுக்கிருக்கும் அன்பை வெளிக்காட்டி அவர் மேல் அவருக்கிருக்கும் தன்னம்மிக்கையைக் கூட்டலாம். தன்னம்மிக்கை கூடும் போது இயல்பாகவே நீங்கள் தன்னைவிட்டு எங்கும் போகமாட்டீர்கள் என்ற எண்ணம் வலுப்பெறும். அது வலுப்பெறும் போது உங்களை நிழல் போலத்தொடர்வதை நிறுத்திக்கொள்வார்.
சுந்தேகத்தின் நிமித்தம் உங்களை ஏதும் காரணமில்லாமல் துன்புறுத்துவாரேயானால் நீங்கள் உங்கள் வைத்தியரின் மூலமாக மனோதத்துவ நிபுணர் ஒருவரின் உதவியை நாடலாம்.