(சில) லண்டன் தமிழருக்கு சூடு சொரணை கிடையாதா?

 

அண்மைக்காலமாக சிறிலங்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிப்பு செய்யுங்கள், இதன் மூலம் சிறிலங்காவுக்கு யுத்தம் செய்ய நிதி பற்றாக்குறை ஏற்படும் என்பது மாதிரியெல்லாம் கட்டுரைகளை பிரசுரித்தீர்கள். சில தமிழ் இணையத்தளங்களும் இது பற்றிய சுலோகங்கள் தாங்கிய அறிவுறுத்தல்களை பிரசுரித்தன. இப்பிரச்சாரங்களால் உந்தப்பட்டோ என்னவோ லண்டனில் ஒரு தமிழ் வர்த்தக நிறுவனம் தாங்கள் இனி சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களை விற்பனை செய்யப்போவதில்லை என ஒரு பேப்பரில் விளம்பரம் செய்தது. எல்லாம் நல்லபடி நடக்கிறது என மகிழ்ச்சியடைந்தால், கடந்த வெள்ளியன்று நடந்த சம்பவம் வேறுவிதமாக இருந்தது.

அன்றய தினம் ஹரோ பகுதியில் தமிழர்களுக்கு சொந்தமான உணவு விடுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்திற்கு பலதரப்பட்டவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். விழாவை குத்துவிளக்கேற்றி ஆரம்பித்தவர் ஒரு பெண்மணி. வேறு யாருமில்லை பிரித்தானியாவுக்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர்தான் அவர். இத்தனைக்கும் இந்த நிறுவனத்தை சேரந்தவர்கள் தாங்கள் தமிழ் உணர்வாளர்களாகக் காட்டிக் கொள்பவர்கள். மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் வித்தையை விலாங்கு மீனிடம் படித்தவர்கள்.

இது வியாபாரம் சம்பந்தப்பட்ட விடயம் இதில் அரசியலை நுழைக்காதீர்கள் என அவர்கள் சாக்குச் சொல்லலாம். இரண்டு நாள் கழித்து BBC Radio 5 Live ல் இலங்கைத் தமிழர்கள் கிரடிட் காட் மோசடியில் ஈடுபடுவதாக சிறிலங்கா உயர்ஸதானிகரின் பேச்சாளர் குற்றம் சாட்டிக் கொண்;டிருந்தார். அப்படியாளால் இந்த வர்த்தக நிறுவனத்தினர் சிறிலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறார்களா?

இலாபத்தை மட்டுமே முக்கியமாகக் கருதும்  இது போன்ற வர்த்தக நிலையங்களுக்கு கல்லாவை நிறைக்க சிறிலங்கா உயர்ஸதானிகரை தாஜா பண்ண வேண்டிய தேவையிருக்கலாம். ஆனால் லண்டன் வாழ் தமிழருக்கு உணவருந்துவதற்கு பல உணவகங்கள் இருக்கின்றன என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இங்கு உணவு உண்ண வருகிற சிங்கள அதிகாரிகளுக்கு இடைஞ்சல் செய்யாமல் நாங்கள் வேறு உணவகங்களுக்கு செல்வோம். நான் சொல்வதை Ethical Tradingஐ விரும்புவர்கள் வரவேற்பார்கள் என நம்புகிறேன்.

வரதன்