ஒரு நாடே இல்லாத தமிழருக்கு பல நாடுகள் கடந்த தமிழீழ அரசு

by:
சாத்திரி

எழுபதுகளில் ஈழத்தில் ஒற்றைக்குழல் துப்பாக்கிகள், ஒருசில கைத்துப்பாக்கிகள்;..உள்ளுரில் தயாரித்த வெடிகுண்டுகள் என்பனவற்றுடன் திக்கொன்றாய் திரிந்த சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட சிறீலங்கா அரசிற்கெதிரான போராட்டம் பலவாகி பல்லாயிரம் பிரச்சனைகளாகி பின்னர் ஒன்றாகி, பலவித படையணிகளுடன் பலம்வாய்ந்த புலியாகி, முப்பத்தி நான்காண்டு காலப் போராட்டத்தின் பின்னர் முள்ளிவாயக்காலில் முடிவாகிப் போய்விட்டது...


முடிவாகிப் போன ஆயுதப் போராட்டத்தினைப் பற்றி  விடை தெரியாத பல இலட்சம் கேள்விகள்... விடுபட முடியாத பல புதிர்கள்..சந்திக்கும் ஒவ்வொரு தமிழரிடமும் பேசப்படும் சந்தேகங்கள்.. இவற்றிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் மனதின் சஞ்சலங்கள்.. அத்தனைக்கும் காலம் ஒருநாள் பதில் சொல்லி நிற்கும்..
எம்மண்ணில் தனியரசிற்காக நடந்த ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்து எம் நிலத்தில் பல இலட்சம் உறவுகள் புலம்பெயர்ந்தும் புலன் பெயர்ந்தும் முட்கம்பி வேலிக்குள் முடங்கிப் போயிருக்கும் இந்நேரம்..புலம்பெயர் தேசத்திலிருந்து நாடுகடந்த தமிழீழத் தனியரசு என்றொரு அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது..பல குழுக்களாக இருந்த ஈழவிடுதலை இயக்கங்கள் இல்லாது போய் இறுதியில் ஒரு விடுதலைப்புலிகள் அமைப்பாகி அதன் ஆயுதப் போராட்டமும் முடிவிற்கு வந்த பின்னர்.. தற்போதைக்கு ஈழத்திலுள்ள தமிழர்களால் ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல அரசியல் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாத சு10ழலில் புலம்பெயர்ந்து தேசங்களில் வாழும் சிலர் தாமே ஈழத்தமிழினத்தின் அடுத்தகட்ட போராட்டத்தினை நகர்த்தப்போவதாகக் கூறிக்கொண்டு மீண்டும் பல குழுக்களாக பிரிந்து நின்று அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.


அவற்றில் விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்கக்கான பொறுப்பாளரான திரு. செல்வராசா  பத்மநாதனால் அமெரிக்காவில் வசிக்கும் சட்டத்தரணி விஸ்வநாதன் உருத்திரகுமார் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டு அது நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கப்படும் என்றொரு அறிக்கையை விடுத்துள்ளது. திரு. பத்மநாதனின் கட்டமைப்பினை ஏற்க மறுத்து  தமிழ்நாட்டு தலைவர்கள் நெடுமாறன் மற்றும் வை.கோ போன்றவர்களினுடாக சில அறிக்கைகளை வெளியிட்டு குழப்பிவிட.. அது போதாதென்று ஜரோப்பிய நாடொன்றில் தங்கியிருக்கும் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர்  ஒருவர் தன்பங்கிற்கு வேறு வேறாய் அறிக்கைகளை இணையத்தளங்கள் ஊடாக வெளியிட்டு குழப்போ குழப்பென்று குழப்பிக் கொண்டிருக்கிறார். தற்சமயம் பலரும் உருத்திரகுமாரின் தலையிலான நாடு கடந்த தமிழீழத் தனியரசு அமைக்கும் முயற்சிக்கு ஆதரவு வழங்கத் தொடங்கி ஓரணியில் திரளத் தொடங்கியிருப்பது கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது. இனிவரும் காலங்களில் இவர்களின் செயற்பாடுகளைப் பொறுத்தே மக்களின் ஆதரவும் அதனு}டாக இத்திட்டத்தின் வெற்றியும் அமையும்.. எனவே இவர்கள் செயய்ய வேண்டியவை:


1) இவர்களது அறிக்கைகள், செய்திகளை நிழல் மனிதர்களால் வெளியிடப்படாமல்,  பகிரங்கமாக மக்களினால் அறியப்பட்டவர்களினால் நேரடியாக மக்களைச ;சென்றடையுமாறு வெளியிடப்படல் வேண்டும்.. ஏனெனில் எமது போராட்டம் முழுக்க முழுக்க அரசியல் போராட்டமாக தொடரப்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கும் பொழுது நிழல் மனிதர்களின் தலைமையின்கீழ் எதனையும் சாதித்துவிட முடியாது..
2) தற்சமயம் சில கலாநிதிகளை மட்டுமோ ஆலோசகர்களாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கட்மைப்பில் என்னைப் போன்ற சாதாரண கல்லா..நிதிகளையும் அனைத்து மக்களையும் இவர்களது வேலைத்திட்டங்கள் சென்றடையும் விதத்தில் மக்களுடன் மக்களாய் வேலைசெய்யக்கூடிய இன்னொரு கட்டமைப்பு உருவாக்கப்படல் அவசியம்..

3) கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளை விமர்சித்தவர்கள்,  தமிழ் மக்களிற்கு நியாயமான ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்று தங்கள் சொந்த லாபநோக்கமற்று செயற்பட மனதார விரும்பி முன்வந்தால், அவர்களையும் உள்வாங்குதல் வேண்டும்..

4)இனி வருங்காலங்களில் இந்த அமைப்பு தமிழ்மக்கள் நலன் சார்ந்து நடாத்தப்படும் எந்த சந்திப்புக்கள் பற்றியதும் ஆலேசனைக் கூட்டங்கள் பற்றியதுமான விபரங்களை உடனுக்குடன் ஊடகங்கள் வாயிலாக தமிழ் மக்களிற்கு தெரியப்படுத்தவேண்டும்..

5) தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் உலகநாடுகளால் கொண்டுவரப்பட்ட தடைகள் ஊடாக தமிழ்மக்களின் நியாயமான போராடத்தினை முடக்கிய நாடுகளில் அதன் தடைகள் நீங்குவதற்கு சட்ட ரீதியாகவும் மக்கள் போராட்டத்தினுடாகவும் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கி விடப்படவேண்டும்.
6)இனிவரும் காலங்களில் இந்திய அரசையோ  இந்திய அரசியல் வாதிகளையோ குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை நம்பி எந்த முக்கிய முடிவுகளையும் எடுத்தல் தவிர்க்கப்பட வேண்டும்.. (இதற்கு கடந்தகால உதாரணங்கள் பலவுண்டு)

இவையனைத்தும் உடனடியாக நடந்துவிடாது என்பதும் எனக்குத் தெரியும் ஆனாலும் பலவருடங்கள் சொன்றாலும் இவை முறையாக நடந்தேறின்.. நான் இக்கட்டுரைக்கு இட்ட தலைப்பான ..ஒரு நாடே இல்லாத தமிழனிற்கு பல அரசுகள்..என்கிற சொல் வலுவிழந்து தமிழனிற்கென்றொரு நாடும் தமிழனிற்கென்றொரு அரசும் நிச்சயம் உருவாகும்..