12 டிசம்பர் 2008, வெள்ளிக்கிழமை

வணக்கம்!

தமிழக நடிகர்களின் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம் தொடர்பாக கட்டுரை ஒன்றை மீள் பிரசுரம் செய்திருந்தோம. அதனால் நாங்கள் அவர்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட்டதாக, பலர் அதிருப்தி தெரிவிச்சு வருகிறார்கள்;. தமிழக நடிகர்களையோ, நடிகைகளையோ அவமதிக்கும் எண்ணம் எங்களிட்டை கொஞ்சமும் இல்லை. கடவுள் எப்பிடியிருப்பார் எண்டே எங்களுக்கு காட்டினவையளை நாங்கள் அவ்வளவு சீப்பா நினைக்கேல்லை. வீக்கென்டுகளிலை நிகழ்ச்சி வைக்கவே எங்களிட்டை சொந்தமா சரக்கு இல்லை. இதுக்கிள்ளை அவையளை விட்டா எங்களுக்கு வேறை என்ன பொழுது போக்கு இருக்கு?

இருந்தாலும் ஒரு உணர்வுபூர்வமான போராட்டம் அதன் நோக்கத்திலிருந்து திசை திரும்பிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சில மாற்றுக்கருத்துக்களுடன் அமைந்த அந்தக்கட்டுரையை பிரசுரித்தோம். ஆனால் அதில தெரிவிச்சிருக்கிற கருத்துக்களுடன் நாங்கள் முழசா உடன்படுறதா எடுத்து கொள்ளாதேங்கோ. உங்கட ஆதங்கங்களை கட்டுரையாளருக்கு தெரிவிச்சிருக்கிறம்.

எங்கட ஆஸதான சித்திரக்காரர், கிராபிக்ஸ் குரு டிஜி கருணாவைப் பற்றிக் கொஞ்சம் சொல்லோணும். முந்தி எங்கட பேப்பரிலை, கமராவாலை எப்பிடி படம் எடுக்கிறது எண்டு படம் காட்டின ஆள் இவர். ஒரு பேப்பரிலை மெச்சக்கூடிய மாதிரி சில அட்டைப்படங்கள் வருகிறது என்றால் இவரின்ரை கருணைதான் அவை. இப்பசெய்தி என்னென்டா, இந்த வருசம் சிங்கப்பூர் அரசாங்கத்தின் தமிழ் இலக்கிய விருது எங்கட தோழி லதாவுக்கு கிடைத்திருக்கிறது. அவரது பரிசுபெற்ற புத்தகத்திற்கான அட்டைப்படத்தை கருணாதான் கீறியிருந்தார். உங்களுக்கு அந்த புத்தகத்தை பார்க்கக்கிடைத்தால் கருணாவின் அதில் கைவண்ணத்தைக் காணலாம் அல்லது கண்டு ரசிக்கலாம்.

இளயவர்களுக்கான இரண்டு பக்கங்கள் புது மெருகுடன் புதவருசத்திலிருந்து வரும் அதுவரை பொறுத்திருங்கள். அது சரி அந்தப்பக்கங்களை நிப்பாட்டினாப்பிறகுதான் அதுககெண்டு அதிகமான ஆக்கங்கள் வருகுது. உங்களை என்னென்டு விளங்கிக் கொள்ளிறது எண்டே தெரியேல்லை. 

கடந்த பேப்பர் நினைவெழுச்சிநாள் சிறப்பிதழ் என்பதனால் சில தொடர்களைப் பிரசுரிக்கவில்லை. இந்த பேப்பரில் அவை சேர்க்கப்பட்டுள்ளன.

“தம்பி வாற ஆக்கள் ஒரு பேப்பரிலை ஒண்டை எடுக்காமல் கனக்க எடுத்துக் கொண்டு போயினம்” எண்ட முறைப்பாட்டை பிரித்தானியாவில் ஒரு பேப்பர் உங்களுக்கு இலவசமாகப் பெற்றுக் கொள்வதற்கு உதவுகிற வர்த்தக நிறுவனங்கள் வைக்கினம். ஒரு பேப்பரில் ஒன்றுதான் இலவசம் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வாறம். 

பின்னை பிறவு சந்திப்பம்.