அவலத்துக்கு உள்ளாகியுள்ள எம்மக்களுக்கு உதவுவோம்!

இலங்கைத்தீவில் கடந்த முப்பது ஆண்டுகளாக தொடரும் யுத்தத்தில், ஈழத்தமிழ்மக்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்துள்ளனர். ஆனால்,
இன்று அவர்கள் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு, பாரிய மனிதஅவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழினத்தின் இருப்பே கேள்விக்குறியாகியுள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நோக்கி அகோர எறிகணைத்தாக்குதல்களையும், விமானத்தாக்குதலகளையும் நடாத்தி வரும் சிறிலங்காப்படைகள் அவர்களுக்கு, அத்தியாவசியமான பொருட்கள் சென்றடைவதனை தடுத்து வருகின்றனர். மக்களை அங்கிருந்து வெளியேற்றி, தமது ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில், அகதி முகாம்களில் முடக்கி விடுவதற்கு, எல்லாவிதமான முயற்சிகளையும் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகிறது.

ஈழத்தில், சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் படும் துன்பம் சொல்லும் தரமற்றது. இராணுவத்தினாலும் அதனுடன் சேர்ந்தியங்கும் கொலைக் குழுக்களாலும் அவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். ஆக்கிரப்பில் உள்ள யாழ் குடாநாட்டில் ஏற்கனவே மக்கள்படும் அவலத்திற்கு மேலாக, அங்கு தொடர்ச்சியான ஊரடங்கு அமுல் செய்யவிருப்பதாக சிறிலங்கா இராணுவம் எச்சரித்திருக்கிறது.

தமிழ்பகுதிகளிலிருந்து வெளியேறி கொழும்பிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் தங்கியிருக்கும் தமிழ் மக்களோ சட்டவிரோத குடியேறிகள் போன்று நடாத்தப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தனியான குடிசன மதிப்பீடும் நடாத்தப்பட்டு, அவர்களை அங்கிருந்து வெளியேற்றவும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

ஒற்றை ஆட்சிமுறைக்குள் தமிழரை முற்று முமுதாக இரண்டாம் தரப்பிரஜைகள் ஆக்கிவிடவே இத்தனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டாலும், மனிதவுரிமைகள் வியடத்தில் அக்கறைகொண்ட எந்த ஒரு அமைப்பும், இதுவரை உருப்படியான நடவடிக்கை எதனையையும் மேற்கொள்ளவில்லை.

செப்ரெம்பர் 25ல் நியுயோர்க் நகரில்கூடிய இணைத்தலமைநாடுகள், இலங்கைத் தீவில் ஏற்பட்டுள்ள மனிதஅவலங்களையிட்டு கவலை தெரிவித்திருக்கின்றன. ஆனால், சிறிலங்கா அரசுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்காமல், வழமைபோல், தமது ஆதரவை புதுப்பித்துள்ளார்கள். 

இந்நிலையில் தாயகத்தில் வாழும் நமது உறவுகளிற்கு உதவுவதற்கு புலம்பெயரந்த தமிழ் மக்களே உள்ளனர். வழமையான களியாட்டங்களை நிறுத்திவிட்டு, எமது மக்களை காப்பாற்ற வேண்டிய செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குவோம்.