ஆச்சியின் அட்வைஸ் ...

ஆச்சிக்கு வணக்கம். நான் எனது ஆதங்கம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எழுதுகிறேன். முன்பு ஒரு காலத்தில் ஊரில் படித்தவர்களுக்கென ஒரு மரியாதையிருந்தது. பணமிருப்பவர்களுக்கு எனவும் ஒரு மரியாதையிருந்தது. ஆனால் இங்கு வெளிநாட்டில் வரவர படித்தவர்கள் சரி படிக்காதவர்கள் சரி எல்லோருமே பணத்திற்கும், வெளிப்பகட்டுக்கும் அடிமையாகி ஒரு போலிகௌரவத்தில் வாழுவதாகத் தெரிகிறது. உங்கள் அபிப்பிராயாம் எப்படி இந்த விடயத்தில்?

எல்லோரும் என்று சொல்ல முடியாவிட்டாலும், போலிக்கௌரவம் என்பது போதை போல. அப்போலிக்கௌரவத்திற்காக சுயகௌரவத்தை இழந்து மனிதாபிமானத்தை அடவுவைத்து எதைச்செய்தாலும் அது நாலுபேருக்கு தெரியவேண்டும் அதனால் தனது பெயரும் புகழும் பெருக வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்திற்காக சமூக சேவைஎன்ற பெயரில் நாய்க்கு எலும்புத்துண்டை போடுவது போல பொதுமக்களுக்கு சிலவற்றை வலது கை கொடுப்பதை இடது கை தெரியாமல் என்பர் அது போல் இல்லாது முடிந்தால் வடதுருவத்தில் இருந்து தென்துருவம் வரை தெரியக்கொடுப்பார்கள். சொந்த சகோதரர்கள் துன்பத்தில் வாடுதல் கண்டும் சிந்தைகலக்காரடி கிளியே செம்மை மறந்தாரடி என்பது போல நடந்து கொள்வர். வீடு, கார், நகை, சேலை, சட்டை என்று எதை வேண்டினாலும், எதை போட்டாலும் தன்னுடைய பணத்தை பறைசாற்றுவது போல்தான் அலுவல்கள் பார்ப்பார்கள். இப்போ படித்தவர்கள் கூட தமது மரியாதை அசையும் அசையா சொத்துக்களில் இருப்பதாக நடந்து கொள்வது எமது வருங்கால சந்ததிகளுக்கு நாம் ஒரு தவறான செய்தியை கொடுத்து அவர்களையும் இந்த நிலையில்லா பணத்தில் மேல் மோகம் கொள்ள வைக்கிறோம். பண்பையும், படிப்பையும், குணத்தையும் பார்க்காது, வைத்திருக்கும் வேகக்கார், போடும் உடுப்பு, வைத்;திருக்கும் நவீன கைத்தொலைபேசி என்று நிலையில்லா பொருளை பார்த்து காதல் கொள்ளும் நிலைக்கு கொண்டு வருகிறோம். அமைதியான உண்மையான அன்பை தேடுவதை விட்டு, ஆர்ப்பாட்டமான, ஆடப்பரமான வாழ்விலும், தரும் பரிசின் விலையைப்பார்த்து அன்பை மதிப்படும் போலியான மாயையில் கவரப்படுகிறோம், இன்நிலை மாற வேண்டும்.