96வது பேப்பர்

வணக்கம்!
இது 96வது பேப்பர். நாங்கள் விளையாட்டு விளையாட்டாய் உங்களை அறுக்க ஆரம்பித்து நாலு வருசம் முடிஞ்சிட்டது.  திரும்பிப்பார்த்தால் மலைப்பாய்த்தான் இருக்கு.

ஆண்டுகணக்கில் பெரிய பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவமோ, ஊடகத்துறை பற்றின படிப்போ எங்களிடமிருக்கவில்லை. ஒரு கொம்பியூட்டரும் பத்திரிகை வடிவமைக்கிற சொப்ற்வெயாரும் இருந்தால் பேப்பர் அடிக்கிறது ஒண்டும் சிரமமில்லை எண்டுதான் தொடங்கினம்.  இவ்வளவுத்துக்கு வந்து நிக்குது.  உங்கட அன்பும் ஆதரவும் தான் எங்களை உற்சாகப்படுத்தியது. (இதை பப்பாவிலை ஏற வைத்தது மாதிரி எண்டு உதாரணம் சொல்லி உங்களை கோபப்படுத்தக்கூடாது.) 

இருந்தாலும் இது ஒண்டும் மலையைப்பிரட்டிற சாதனை இலலைத்தான்.  இன்பமும் துன்பமும் கலந்த ஒரு அனுவமும் படிப்பினையும் கிடைத்திருக்கிறது என்பது உண்மை. இனியும் தொடர்வதா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லோணும். உங்கட ஆதரவு கூடவருமானால் நாங்களும் தொடருவம். இல்லாட்டா விட்டுட்டு வேறை வேலையை பார்க்கப்போயிடுவம்.

எங்களை பொறுத்துக் கொள்கிற வாசகர்கள் இருக்கிறமாதிரி, ஒரு பேப்பர் படித்தால் இரத்த அழுத்தம் ஏறுகிற ஆக்களும் இருக்கினம். எங்களுக்கு விளங்காத தத்துவ விளக்கங்களைக் கூறி இதெல்லாம் ஒரு பேப்பரோ எண்டு கத்திற ஆக்களும் இருக்கினம். பரவாயில்லை இதை வாசிக்க வேண்டும் என்று தோன்றினால் வாசியுங்கள் அல்லது ரீ சைக்கிளிங கூடைக்குள் போட்டு விட்டு உங்கட சோலியைப் பாருங்கோ (அப்பிடி ஏதும் இருந்தால்). ஒரு பேப்பருக்காக வீணா ஏன் உங்கடை உடம்பை கெடுத்துக் கொள்ளுவான்?

எமது விளம்பரதாரர்களைப்பற்றியும் சொல்லவேணும். தங்கள் விளம்பரத்தை பிழை எதுவும் இல்லாமல் பிரசுரிக்கவேணும் என்பதைத்தவிர அவர்கள் எங்களிடம் வேறு எதனையும் எதிர்பார்ப்பதில்லை. நாங்களும் அந்த ஒன்றை விட வேறெந்த உபகாரமும் அவர்களுக்குச் செய்வதில்லை. இதற்கிடையில் ஒரு பேப்பரில் விளம்பரங்களை போடவேண்டாம் எண்டும், அவையைவிட நாங்கள் மலிவா அட்வேர்ட் போடுவம், எங்கட பேப்பர் சந்திர மண்டலத்திற்கும் போகுது எண்டு சொல்லிற ஆக்களும் இருக்கினம். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது எங்களுக்கு ஆதரவு வழங்கி வரும் வர்த்தக நண்பர்களுக்கு எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்னும் எத்தனை பேருக்கு நாங்கள் நன்றி சொல்லவேணும் அதுக்கு 40 பக்கங்களும் போதாமலிருக்கும் என்பதால் பொதுவாக எல்லோருக்கும் நன்றி சொல்லிறம்.

ஈழத்தமிழர்களுக்கு நெருக்கமான, அவர்களை நேசிக்கிற எங்கள் தோழன், பாமரன் என்கிற எழிற்கோ இந்த பேப்பரிலிருந்து ஒரு தொடரை எழுதுகிறார். ஈழத்தமிழர்களுடனான அவரது உறவின் நெருக்கத்தை அவருக்கே உரிய எள்ளல் மொழியில் கோயம்புத்தூரிலிருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்வார்.

வேறை?

மீண்டும் சந்திப்போம்