துயர் சூழ்ந்த நாள் தொடர்கிறது

by:
இரவி அருணாசலம்

சென்ற 'ஒரு பேப்பர்' இல் புதிய உலகம் செய்ய புறப்பட்ட என் மைந்தன் பற்றி எழுதியிருந்தேன். அந்தத் துயரம் ஆறவில்லை. ஆறாது. காலம் இந்தக் காயத்தை மாற்றும் என்றுதான் நம்பினேன். காயங்கள் தன் கொடூரங்களால் என்னைத்தின்றபடி இருக்க விட்டுவிட்டது காலம்.

ஆறுதற் சொல் கோர்த்து நெஞ்சுக்கு ஆதரவாய் தோழி ஒருவள் மடல் எழுதியிருந்தாள். "புதியதோர் உலகம் படைக்கப் புறப்பட்ட கலைஞன் நீங்கள்.எப்படித்துவளலாம்? கூடாது! நிமிர்ந்திருங்கள்'' என்று மூன்று பக்க மடலில் ஒருவரி. வார்த்தைகள் பல என்னைக் கூச்சமெழச் செய்த போதும் என் நெஞ்சுக்கு மன ஆறுதல் தந்தன. நன்றி தோழி. மிக்க நன்றி.

நினையாப் பிரகாரம் மேலும் ஒரு துயர் சூழ்ந்தது. எம் புலம்பெயர் தமிழருக்கு என்றிருந்த காட்சி ஊடகம் தடைப்பட்டுப் போனது. ரிரிஎன் என்ற தமிழ் ஒளியின் பணிகள் முடக்கப்பட்டன.
"நமக்கென்றோர் தொலைக்காட்சி'' என்று முன்னர் நான் எழுதியிருந்தேன். அது ஆரம்ப காலம். 2000 ஆம் ஆண்டு யூலை மாதம். நமக்கென்றோர் தொலைக்காட்சி தேவை என்று பணிகள் முடக்கி விடப்பட்டன. கோடை காலத்து மதிய வெய்யிலுக்குள் இருள்  இன்னும்  வராத இரவினில் என்றெல்லாம்  பணிகள் தொடர்கின்றன.  இலண்டனில் தொலைக்காட்சி நிலையம் அமைவதற்கான பூர்வாங்க வேலைகள் நடந்தேறுகின்றன.

பயிற்சி பெறுவதற்காக ஏற்கனவே இயங்கிக் கொண்டு இருந்த தொலைக்காட்சிச்  சேவை ஒன்றிற்கு புதிய உலகம் செய்யப் புறப்பட்ட என் மைந்தனை அனுப்பி வைக்கின்றேன். பயிற்சி பெறுகிறான். நினையாப் பிர காரம் தான் அதுவும் நிகழ்கிறது.

காலம் கொடுங்கரமாய் நீண்டு ரிரிஎன் இன் கழுத்தை நெரித்து விட்டது. வீசப்பட்டு விட்டது புலம் பெயர் தமிழர் வாழ்வு.
பிரான்சிலுள்ள தொலைக்காட்சி சேவை நிறுவனம் தன் பணிகளை இழுத்து மூட இருந்த வேளையில் அதனைக் கையகலப்படுத்துகிறோம். பணியாளர்கள் தயார். தொழில்நுட்பவியலாளர்கள் தயார். தயாரிப்பாளர்கள் தயார். 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளன்று ஒளிர ஆரம்பித்தது  ரிரிஎன் என்ற தமிழ் ஒளி.

அந்த நாள் அடங்கா மகிழ்வு கொண்டநாள்!  நமக்கென்றோர் தொலைக்காட்சி. நம்கையில் ஒரு காட்சி ஊடகம். எத்துணை மகிழ்வு அது. எத்துணை அற்புதம் அது. அப்போ என்னிடம் சொந்தமாய் வாகனம் இல்லை. ஓடும் அனுமதியும் கிடையாது. இலண்டனுக்கு அப்பொது தான் வந்த 'ட்ராம்' வண்டியில் ஏறிப் பணி புரியச் செல்கிறேன். இரவினில் ட்ராமில் போய் விடிய விடிய வேலை. விடிந்த பின் ட்ராமில் மீள் வருகை.

இப்போதும் ட்ராமைக் கண்டால் பெரிதான ஏக்கம் என் நெஞ்சைக் குத்திக் குடையும். இலண்டனுக்கு  ட்ராம் வந்ததும் ரிரிஎன் இன் வரவும் ஒருசேர நிகழ்ந்ததில் ட்ராம் எனக்கு ஒரு குறியீடாக நிற்கிறது. என்றாலும் ட்ராம் இப்போதும் ஓடிக் கொண்டிருப்பதை ஏக்கப் பெருமூச்சுடன் சொல்கிறேன். அடர்ந்த மரங்கள் நடுவே  பூங்காவின் இடையே தார் வீதியுடன் சமாந்தரமாய் ட்ராம் ஓடுகிறதே என்ற ஏக்கத்தைச் சொல்லவில்லை. ஊடகம் ஓடாமல்
நின்றதே என்ற ஏக்கத்தைச் சொல்கிறேன்.

"நமக்கென்றோர் தொலைக்காட்சி'' என்று முன்னர் நான் எழுதியிருந்தேன். அது ஆரம்ப காலம் 2000 ஆம் ஆண்டு யூலை மாதம். உங்கள் தமிழுக்கு வயது ஒன்று என்று எழுதி ஓராண்டு மகிழ்வுப் பூர்த்தியைக் கொண்டாட பிரான்சின் ரிரிஎன் தலைமைக் பணிமனைக்குள் செல்கிறேன்.

 என் மைந்தன் அங்கு தன் மூக்குக் கண்ணாடிகளைச் சரி செய்தவாறு `என்ன மாஸ்டர் வந்திட்டீங்கள்'  சிரித்து கட்டிப் பிடித்து வரவேற்கிறான். அது தந்த பூரிப்பு வேறு. அங்கு திரைக்கலைஞர் மணிவண்ணன் இசைக்கலைஞர் கங்கை அமரன் இவர்களை வைத்து நிகழ்ச்சிகள் தயாரிக்கிறேன்.
தொகுப்பு வேலையை (Editing)  மைந்தன் செய்
கிறான். இரண்டு வாரங்களில் நிகழ்ச்சிகள்  நிறைவுறு கின்றன. இலண்டன் திரும்புகிறேன்.