உள்ளங்களை வெல்வோம் .. உறவை வளர்ப்போம் ...

by:
இராம K நாதன்

இந்த உலகத்தில் எவரும் தனியாளாக வாழ்ந்து விட முடியாது. வீட்டில், வேலைத்தளத்தில், காரியத்தில், கடைத்தெருவில் எங்கு சென்றாலும் பிறருடன் நாம் பேசிப்பழக வேண்டும். இவர்களுடன் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்களது நாள் அமையும்.

நீங்கள் யாருடனாவது கதைக்கும் போது உங்கள் முகம் என்ன சொல்லுகிறது?  நீங்கள் வாயினால் சொல்லும் செய்தியிலும் பார்க்க உங்கள் முகமே உங்களது மன நிலையைக் காட்டிக் கொடுத்து விடும். உங்களது முகம் கவலையுடன் காணப்படுகிறதா? கோபத்துடன் இருக்கிறதா? விரக்தியைக்காட்டி நிற்கிறதா? உங்கள் முகம் உங்களது எண்ணத்தைப் பிரதிபலிக்க,  நீங்கள் பேசும் சொற்களிலும் பார்க்க ஒரு கூடிய பங்கு வகிக்கிறது. இந்த முகம் சொல்லும் செய்தியை மறைப்பதெப்படி?

உங்களது  முகத்தில் ஒரு புன்னகையைத் தவழ விடுங்கள். உடனே உங்களது முகத்தோற்றத்தில் ஒரு மாறுதலைக் காணக் கூடியதாக இருக்கும். அது மாத்திரமன்று. ஒருவர் புன்னகைக்கும் போது அவருடைய குரலே மாறிவிடுகிறது. ஒருவர் புன்னகையுடன் பேசும் போது அவருடைய குரலில்  கோபம் இருக்க முடியாது, சோகம் இருக்க முடியாது,மகிழ்ச்சி மாத்திரமே வெளிப்படும். நீங்கள் மகிழ்ச்சியைக் வெளிக்காட்டினால் அது மற்றவர்களையும் தொற்றிக் கொள்ளும்.

இதை நீங்களே பரீட்சார்த்தமாகச் செய்து பார்க்க
லாம். இன்று தொடக்கம் எந்நேரமும் வீட்டில் இருந்தாலென்ன, வெளியில் போனாலென்ன, ஒரு புன்னகையை உங்கள் முகத்தில் தவழ விடுங்கள். முன்பின் தெரியாதவர்களுடன் பேசும் போது கூட உங்கள்  முகத்தில் ஒரு புன்னகை தவழட்டும். நீங்கள் ஒரு சுய தொழில் புரிபவராக இருந்தால் உங்கள் வாடிக்கையாளர்களுடன் பேசும்போது ஒரு புன்னகையுடன் பேசுங்கள். நிச்சயம் அவரும் உங்களுடன் மகிழ்வாகப் பேசுவார்.

கோபமாக இருபப்பவர்கள் கூட  உங்கள் புன்னகையின் முன் கோபம் தணிந்து விடுவர். முகத்தில் புன்னகையிருக்கும் போது உங்களது குரல்  கூட  ஒரு நட்பை வெளிப்படுத்தும்.

உங்களுடன் மற்றவர்கள் நட்புடன் பழகவும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பெருகவும் இலகுவான வழியொன்று இருக்கிறது
இதனால் தான் தொலைபேசி மூலம் பொருட்கள் அல்லது சேவைகளை (Tele Sales) விற்பனை செய்வோர் அவர்கள் தொலைபேசியில் பேசும் போது கூட  புன்னகையுடன் பேச பழக்கப்படுகிறார்கள். மறுமுனையில் இருப்பவர் இவர்களது முகத்தைப் பார்க்க முடியாது இருப்பினும் அவர்களது தொனி ஒரு நட்பை வெளிப்படுத்தும்.

காலையில் எழுந்தவுடன் உங்கள் குடும்ப அங்கத்தவர்களுடன் ஒரு புன்னகையுடன் பேசிப்பாருங்கள். வேலைக்குச் செல்லும் போது உஙகள் சகபிரயாணிகளுடன் ஒரு புன்னகையுடன் பேசுங்கள். நாளாவட்டத்தில் உங்களுக்கு நண்பர்கள் பெருகுவார்கள்.
உங்களுடன் எல்லோரும் அன்புடன் நட்பு
டன் பழகுவார்கள். உங்கள் வாழ்க்கை மகிழ்வான
தாக இருக்கும். புன்னகைத்தல் என்பது செலவு
செய்யாது மற்றையோருக்கு அளிக்கப்படக் கூடிய பரிசு. மற்றையோரும் தயக்கமின்றி உங்களுக்கு தரக் கூடியதொன்று. எனவே புன்னகைத்தல் ஒருவருக்கொருவர் நட்டமின்றிப் பரிமாறிக் கொள்ளக் கூடியதாகும்.

ஒரு பெரிய பல்பொருள் அங்காடிக் கடை
யொன்றில் அங்கு வேலை செய்யும் பணியாளர்
களுக்கு கீழ்க்கண்ட வாசகம் எழுதப்பட்ட அட்டையொன்று விநியோகிக்கப் பட்டது. அதில் எழுதியிருந்தவற்றைக் கீழே காணலாம்.
"புன்னகை செய்யுங்கள். ஏனெனில் அதற்கு விலை கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் இலாபம் அதிகம். அதைப் பெறுபவர்கள் நன்மையடைகிறார்கள். கொடுப்பவர்கள் நட்டம் அடைவதில்லை. அது வினாடியில் நடந்து விடுகிறது.

ஆனால் அதன் தாக்கம் பல மணித்தியாலங்கள் நீடிக்கும்.  புன்னகையை விரும்பாத எந்தப் பணக்காரனும் கிடையாது. அதைக் கொடுக்க முடியாத எந்த ஏழையும் கிடையாது. அது வீட்டில் மகிழ்வைக் கொடுக்கும். வியாபாரத்தில் நல்லெண்ணத்தைக் கொடுக்கும். மனிதர்களிடையே நட்பை வளர்க்கும்.

இருந்தாலும் அது பணம் கொடுத்து வாங்க முடியாதது. பிச்சையெடுத்து பெற முடியாதது. கடன் வாங்க முடியாதது. களவெடுக்க முடியாதது. பிறருக்கு கொடுக்கும் வரை அதற்கு மதிப்புக் கிடையாது. ஆகவே எமது வாடிக்கையாளருடன் பேசும் போது புன்னகையுங்கள். அவர்கள் புன்னகைக்காத போதும் நீங்கள்  புன்னகையுங்கள். ஏனெனில் உங்களைப் பார்த்து புன்னகைக்க முடியாதவர்களுக்குத் தான் அது அதிகம் தேவைப்படுகிறது.''

எனவே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! புன்னகைக்கு விலை கிடையாது. ஆனால் விலை மதிக்க முடியாதது. இன்றிலிருந்து உங்களது முகத்தில் எந்நேரமும் ஒரு புன்னகை தவழட்டும்.