நானும் போனனான்.

by:
சாத்திரி

IATAJ's annual conference

நவரச உணர்வுகளிலை ஒரு நாலைஞ்சு ரச உணர்வுகளை எனக்குள்ளை ஏற்படுத்தின ஒரு நிகழ்சி அதுக்கு நானும் போனான் அதைப்பற்றித்தான் எழுதவாறன்.கடந்த 26 .சித்திரை சனிக்கிழைமை இலண்டனிலை நடந்த சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியம் நடத்தியிருந்த .ஊடகமும் இலங்கை முரண்பாடும் உண்மை எங்கே..என்கிற தலைப்பிலை நடந்த நிகழ்விற்கு எனக்கும் அழைப்பிதழ் கிடைச்சிருந்தது.இப்ப நாலுபேர் ஒண்டாய் சேந்து கதைக்கிறதையே பலர் மகாநாடு எண்டுதான் விளம்பரப்படுத்தினம் அதாலைதான் நான் இதை மகாநாடு என்று எழுதாமல் நிகழ்வு எண்டு எழுதினனான்.அந்த நிகழ்விற்கு ஊசலாடல்வியலாளனான என்னையும் ஒரு ஊடகவியலாளன் எண்டு மதிச்சு எனக்கு அழைப்பிதழ் அனுப்பிருந்ததை பாத்ததும் எனக்கு மூளை முழங்கால் புரியாத சந்தோசம்.சத்தியமாய் எனக்கு நித்திரையே வரேல்லை இரவிரவா பிரண்டு பிரண்டு படுத்து விடிஞ்சதும் விமான நிலையத்துக்கு எழும்பி ஓடிப்போய் நேரம் இருந்ததாலை அங்கையே கதிரையிலை கொஞ்சநேரம் இருந்தபடி நித்திரையை கொண்டிட்டு ஒருமாதிரி லண்டன் போய் இறங்கி நிகழ்வு நடக்கவிருந்த ..கரோ பகுதியிலை இருந்த வெஸ்ர்மினிஸ்ரர் யுனிவசிற்றி .

விலாசத்தை தேடிப்பிடிச்சு போய்ச் சேந்திட்டன்.இனி நானும் லண்டன் வெஸ்ர்மினிஸ்ரர் யுனிவசிற்றிக்கு போனனான் எண்டு பெருமையடிக்கலாம். ஆனால் அங்கை படிச்சனியா எண்டு யாராவது கேட்டால்தான் வில்லங்கம்.சரி யுனிவசிற்றிக்கை வந்த சந்தோசத்திலை இருக்கேக்குள்ளை அடுத்தடுத்து எனக்கு ஆச்சரியத்துக்கு மேலை ஆச்சரியம். முதலாவது குறிச்ச நேரத்துக்கு மங்கல விளக்கேற்றத்தோடை இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்குமான மெளன அஞ்சலியுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அடுத்தது அழைப்பு அனுப்பியிருந்த பெரும்பாலான ஆக்களும் குறிச்ச நேரத்துக்கே அங்கை வந்திருந்திச்சினம்.அடுத்த அதிர்ச்சி. தமிழ்ப்பத்திரிகை உலகிலை முடிசூடா மன்னர்கள் மன்னிகள் (பெண்பால் சரியோ தெரியாது) மட்டுமல்ல இந்த நிகழ்வுக்கு மின்னஞ்சல் அழைப்பை மட்டுமே ஏற்று வருவினமா வரமாட்டினமா என்று நான் சந்தேகப்பட்ட பல மகாராசாக்கள் கூட வந்திருந்தவை.வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் அதே நேரம் ஈழப்போராட்டம் மற்றது ஈழத்தமிழர் பற்றிய பலவருட அனுபவங்களை கொண்ட இரண்டு இந்திய பத்திரிகையாளர்களான பகவான்சிங் மற்றும் சுந்தரராஜன் முராரி ஆகியோரும் வந்திருந்தனர்.

இவர்களையெல்லாம் ஒரே இடத்திலை ஒன்று கூட்டின சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்துக்கு மனம் திறந்து பாராட்டத்தான் வேணும்.இது சர்வதேச பத்திரிகையாளருக்கான ஒரு நிகழ்வு சர்வதேசத்துக்கும் இதுபற்றிய செய்திகள் போய்ச்சேர வேண்டும் என்றதாலை அங்கை கதைச்சவையின்ரை அனைத்து உரைகளும் ஆங்கிலத்திலேயே இடம்பெற்றது.அதாலை எனக்கு விளங்காததுகளை இடைக்கிடை பக்கத்திலை இருந்தவரை சுரண்டி மெதுவாய் கேட்டு தெரிஞ்சுகொண்டன். ஆனால் எனக்கொரு சின்னக்கவலை அதிலை கலந்து கொண்டிருந்த இந்திய பத்திரிகையாளர்கள் தங்களுக்கு பேச ஒதுக்கப்பட்டிருந்த நேரத்துக்குள்ளை இலங்கைப் பிரச்சனை பற்றின தங்கடை அனுபங்களை பகிர்ந்து கொண்ட நேரத்தை குறைச்சு தற்சமயம் இலங்கைப்பிரச்சனை பற்றிய இந்திய ஊடகங்களின் பார்வை.

இனிமேல் காலத்திலை இந்த தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் இந்திய ஊடகவியலாளர்கள் அல்லது இந்தியத் தமிழ் ஊடகவியலாளர்கள் இணைந்து செயற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் அல்லது ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய தொடர்புகளைப்பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாய் சொல்லியிருக்கலாம். .உரையாற்றியவர்களில் பி.பி.சி. சிங்களசேவையைச்சேர்ந்த சந்தன பண்டார சிங்கள ஊடகங்களிற்கு எதிரான சிறீலங்கா அரசின் வன்முறைகளை குறிப்பிட்டதுடன் அரசாங்கத்தின் தணிக்கைகளால் சிங்கள மக்களிற்கும் இலங்கையின் உண்மையான நிலைபற்றிய விபரங்கள் போய் சேருவதில்லையென்று தனது கருத்தை சொன்னார் கேள்வி நேரத்திலை இவரை ஒரு ஊடகவியலாளனாய் நினைச்சு கேள்வி கேக்காமல் ஒரு சிங்களவனாகவே நினைச்சு சில தமிழர் தாழிச்சு விட்டிட்டினம்.. அடுத்தாய் கலாநிதி.சேரன் அவர்கள் தமிழ் ஊடகங்களின் குறை நிறைகளை சுட்டிக்காட்டி ஊடகவியலில் ஊகங்கள் செய்தியாகக்கூடாது ஆனால் தமிழ் ஊடகங்களில் இது அதிகமாகவே இருக்கிறது என்று அவர் சொன்ன கருத்து சத்தியமாய் உண்மை.

தமிழ் ஊடகங்கள் எப்படி செயற்படவேண்டும் என்று சில ஆலோசனைகளையும் முன் வைத்தார். மற்றையோர்களின் உரைகளும் கொடுக்கப்பட்ட தலைப்பினுள் தற்காலத்திற்கு தேவையானதாகவும் இருந்தது. நவரசத்திலை நகைச்சுவை முக்கியமானதல்லோ அது கேள்விநேரத்திலை இருந்தது.கேள்வி நேரம் தொடங்கினதும் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும் எண்டதற்காக ஒருவர் ஒரு கேள்வி மட்டுமே கேக்கலாம் என்கிற அறிவிப்போடை கேள்விநேரம் ஆரம்பமானது. அங்கை வந்திருந்த பலர் உண்மையாக தங்களுக்கு சில விசயங்களை தெரிஞ்சு கொள்ளுறதுக்காக கேள்வி கேட்டமாதிரி தெரியேல்லை தங்கடை வித்தகத்தை காட்டி பதில் சொல்லுறவரை எப்பிடியாவது மடக்கவேணும் எண்டுநினைச்சு கேள்வி கேட்ட மாதிரித்தான் இருந்தது. சிலர் கேள்வி கேக்கஎண்டு எழும்பி தாங்கள் ஒரு விரிவுரை நடத்திச்சினம்.சிலர் கேள்வியை கேட்டு தாங்களே பதிலையும் சொல்லிச்சினம். அதைவிட சிலர் ஒரு கேள்வி முடிஞ்சதும் இன்னொரு கேள்வி பிளீஸ் பிளீஸ் எண்டு ஜஸ்பழத்துக்கு கெஞ்சிற குழந்தையள் மாதிரி கெஞ்சிக்கொண்டு நிண்டிச்சினம்.இதுகளைப்பாத்த�
�� சிரிச்சதிலை நான் ஏதோ கேள்வி கேட்க நினைச்சிருந்தனான் அது எனக்கு மறந்து போச்சுது.இவ்வளவையும் எழுதிப்போட்டு ஒரு குறைகூட எழுதாட்டி எழுதினதுக்கு பிரயோசனம் இல்லையெல்லோ .

குறை என்னவெண்டால் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின்ரை இரண்டு பேரின்ரை படம் மட்டும்தான் மேடையிலை இருந்திச்சுது மற்றைய ஆக்களின்ரை படங்களையும் மினக்கெட்டு தேடியெடுத்து வைச்சிருந்திருக்கலாம். நிகழ்வு தொடங்க முதலேயே அங்கை இருக்கிறவை எல்லாரும் தயவு செய்து உங்கடை கைத்தொலைபேசியளை நிப்பாட்டி வைக்கும்படி காலைப்பிடிச்சு கெஞ்சிக் கேக்கிறம் எண்டு ஒரு அறிவிப்பை செய்திருக்கலாம்.ஏனெண்டால் மேடையிலை கதைக்கிறவைக்கு பின்னணி இசை குடுக்கிறமாதிரி பலரின்ரை தொலைபேசியள் சத்தம் போட்டு தொல்லை குடுத்தக்கொண்டிருந்தது. கடைசியா ஆனந்தி சூரியப்பிரகாசம் நன்றியுரை கூறுவார் எண்டு அறிவிச்சினம் ஒரு பெண்மணி கையிலை ஒரு கடுதாசியோடை அவசரமாய் மேடையிலை ஏற நானும் அவாதான் ஆனந்தி சூரியப்பிரகாசமாக்கும் எண்டு ஆவெண்டு பாத்துக்கொண்டிருக்க ஒருதர் மேடையிலை ஏறி அவாவின்ரை காதுக்கை ஏதோ சொல்லி மேடையாலை இறக்க எனக்கு ஒரே குளப்பமாய் போச்சுது.

பிறகு இன்னொரு அம்மணி மேடையிலை ஏறி நன்றியுரை சொல்ல அவாதான் உண்மையான பி.பி.சியிலை முந்தி கேட்ட அதே குரலுக்கு சொந்தமான ஆனந்தி சூரியப்பிரகாசம் எண்டு தெரிஞ்சுது. இந்த நிகழ்வுக்கு இந்திய தமிழ் ஊடகவியலாளர்களை அழைத்திருந்தும் அவர்களிற்கு விசா தாமதம் கடவுச்சீட்டு இல்லையெண்டு பல பிரச்சனையாலை கனபேர் வரேல்லையாம். அதாலை அடுத்த நிகழ்வை இந்தியாவிலை வைச்சால் பிரயோசனமாய் இருக்கும் எண்டு இந்த தமிழ் ஊடகவியலாளர் கதைச்சுகொண்டு நிண்டதை ஒட்டுக்கேட்டன். சரி அடுத்த நிகழ்வு இந்தியாவிலை வைப்பினமா?? வைச்சால் என்னையும் கூப்பிடுவினமா??? கூப்பிட்டாலும் றிக்கற்காசுக்கு என்ன செய்யிறது எண்டு யோசிச்சபடியே வீட்டை வந்து சேந்திட்டன். 

மேலதிக படங்கள் கீழே இணைப்பில் பார்க்கவும்