சோரம்போனவர்களை வைத்து தேர்தல் நாடகம்

மனிதவுரிமை மீறல்கள் உச்சகட்டத்திலிருக்கும் சிறிலங்காவின் அரசு சர்வதேசமட்டத்தில் தனிமைப்படுத்தபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமது நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பினை சிறிலங்கா சரிவரச் செய்யவில்லை எனக்காரணங்காட்டி, மக்களை பாதுகாக்கும் உரிமை என்ற அடிப்படையில் வெளிநாடுகளின் தலையீடு ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் சிறிலங்கா அரசினை தொற்றிக் கொண்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக கொசோவோ நிலை அங்கு தோன்றி விடுமோ என்ற அச்சத்தை சில சிங்கள அரசியல்வாதிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையிலிருந்து தப்பிக் கொள்ளவற்காக மேற்குலகிற்கு பிடித்தமான சில காரியங்களைச் செய்ய சிறிலங்கா அரசு முயன்றுவருகிறது. தமிழ் மக்கள் மீதான போரை தீவிரப்படுத்திக்கொண்டு, தேர்தல், சனநாயக முறை, ஒரு அரைகுறை தீர்வுத்திட்டம் என சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில் அது இறங்கியுள்ளது.

தமிழ்ப்பகுதிகளை சனநாயகப்படுத்துவதற்காகவும், அப்பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காகவும் அங்கு தேர்தல்கள் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேரந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்துவதில் சிறிலங்கா அரசு அவசரம் காட்டிவருகிறது. அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தப்போவதாக சிறிலங்கா கூறிவருவதும் இதன் அடிப்;படையிலேயே அமைந்துள்ளது.

கிழக்கில் ஆயுதமுனையில் நடாத்தப்பட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தல்களைத் தொடர்ந்து, பிரிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணசபையின் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் காட்டுகின்ற தீவிரம் அச்சபையின் முக்கியத்துவத்தை அதிகரித்துக் காட்டுவதாக அமைந்துள்ளபோதிலும், முறையான அதிகாரப்பகிர்வு எதுவுமில்லாத ஒரு அலகாகவே அது அமையும்.

சிறிலங்கா அரசு முன்வைக்கிற எதனையும் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிற சில தமிழ்க் குழுக்கள் சிறிலங்கா அரசினைப் பலப்படுததும் நோக்கில் இத்தேர்தலில் குதித்துள்ளன. அன்று இணைந்திருந்த அகன்ற மகாணசபையில் சுயமாக கதிரை வாங்கும் அதிகாரம்கூட தமக்கு இருக்கவில்லை என அதை நிராகரித்து, தமிழீழ பிரகடனம் செய்தவர்கள்கூட, இன்று 13ம் திருத்தச்சட்டத்தின் சாதகத்தன்மை பற்றி பேச ஆரம்பித்திருப்பது, இந்த அமைப்புகள் தமிழ்மக்களிடமிருந்து அன்னியப்பட்டுவிட்டதையும், தமது எஜமானர்களின் குரலாக அவர்கள் மாறிவிட்டதையும் வெளிக்காட்டிநிற்கிறது.