வன்முறைக்கு கிடைத்த அரச அங்கீகாரம்

விடுதலைப் போராட்ட இயக்கங்களை, அவை வன்முறைகளில் ஈடுபடுகின்றன எனக்  குற்றஞ்சாட்டி, அப்போராட்டங்களில் உள்ள நியாயத்தன்மையை சர்வதேச உலகம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. வன்முறையினால் ஏற்படும் மனித அவலங்களை கருத்திற்கொண்டு ஆயுதப்போராட்டங்கள் நாகரீக உலகினால் வெறுக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் பயங்கரவாத அமைப்புகளாக பட்டியலிடப்பட்டுள்ளன. வன்முறையை கைவிட்டு சனநாயக வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அவற்றின் மீது பல்வேறு அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 
 
வன்முறையை காரணங்காட்டியே, ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், அதனை முன்னெடுத்துவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் சர்வதேச உலகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஈழத்தமிழர் மீது சிங்கள ஆட்சியாளர்கள் வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றபோதும், அங்கு தமிழ்மக்களின் மனிதவுரிமைகள் மீறப்பட்டு வருகின்றபோதும், அது ஒரு இறைமை கொண்ட அரசாங்கம் பயங்கரவாதத்தை முறியடிக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாக நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், பாலியல் பலாத்காரம் என எல்லாவிதமான வன்முறைகளையும் புரிந்துவரும் ஆயுதக் குழுவான “பிள்ளையான்” குழுவுடன் சிறிலங்காவின் ஆழும் கட்சி இணைந்திருப்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதது. அனைத்துலக மனிதவுரிமை அமைப்புக்களினால் ஆதரங்களுடன் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒரு வன்முறை குழுவுடன் சிறிலங்கா அரசாங்கத்திற்கு உள்ள நெருங்கிய தொடர்பு இப்போது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இனி கொலையாளிகளைத் தேடி அதிகம் அலையவேண்டாம். சிறிலங்கா சனாதிபதி மாளிகையே அவர்களுக்கு சரணாலயமாக இருக்கிறது.

ஆயுதபலத்தால் மக்களையும், இதர அரசியற் கட்சிகளையும் மிரட்டி, தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் அவர்கள் ஐனநாயக வழிமுறைக்கு வந்துவிட்டார்கள் என யாரும் முட்டாள்த்தனமான அர்த்தம் கற்பிக்க முடியாது. ஏற்கனவே ஆயுதங்களை கைவிட்டு சனநாயக வழிக்கு வந்தவர்கள் என வெளிப்படையாக சொல்லிவரும் ஈபிடிபி குழுவினர் கூட இன்னமும் கொலைகளை புரிந்துவருகிறார்கள்.

சட்டத்திற்கு புறம்பான வன்முறையை அங்கீகரித்து, அவர்களுடன் கரங்கோர்த்துள்ளதன் மூலம், சிறிலங்கா அரசாங்கம் தனது ஆழுமைக்கு உட்பட்ட மக்களைக் காக்கும் பொறுப்பிலிருந்து விலகிவிட்டது. இந்தப் புதிய சூழல், தீவில் இரத்தக் களரியை நிரந்தரமாக்கிவிடும் அபாயத்தை தோற்றுவித்துள்ளது.