காலாவதியான தீர்வுத்திட்டம்!

யுத்த நிறுத்த ஒப்பந்த்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகிக்கொண்ட சிறிலங்கா அரசு சர்வதேசநாடுகளின் கண்டனங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவசர அவசரமாக சிறிலங்கா அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் தனக்கேற்றவகையில் தீர்வுத்திட்டமொன்றை வெளியிட்டுள்ளது. மாகாணசபைகள் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பதே அந்த தீர்வுத் திட்டத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்டுக் கொண்ட இந்த அறுபது வருடகாலத்தில் ஆட்சிக்கு எந்த அரசாங்கமும் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை விளங்கிக்கொண்டு அவர்களுடன் முறையான அதிகாரப்பகிர்வினை மேற்கொள்ளவில்லை. இருப்பினும் முன்னர் சிங்கள தரப்பு நடைமுறைப்படுத்துவதாக அறிவித்த குறைந்தபட்சமான தீர்வுத்திட்டங்களைக்கூட தமிழர்கள் நன்றியுடன் வரவேற்றிருக்கிறார்கள்.

82ல் ஜே.ஆர். ஜயவர்தனாவால், அமைக்கப்பட்ட மாவட்டசபைகள், 87ல் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்படி வடக்கு – கிழக்கு  இணைக்கப்பட்ட மாகாணசபைகள் போன்ற அதிகாரப்பகிர்வு திட்டங்களை தமிழ் மக்களிடையே இருந்த மிதவாதத் தலைவர்களும் கணிசமானளவு பொதுமக்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரை பெற்ற அனுபவங்களி;ன் அடிப்படையில், நிலமை இப்போது மாறியிருக்கிறது.

பின்னோக்கிய நகர்வாக முன்வைக்கப்பட்டிருக்கும் மாகாணசபைத்தி;ட்டத்தை தமிழமக்கள் கவனத்தில் எடுக்கப் போவதில்லை. பதவி ஆசையில் சிங்கள அரசுடன் சேரந்தோடிக் கொண்டிருக்கும் ஒரு சில தமிழர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்.

அதிகாரப்பகிர்வு திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் என சிறிலங்காவை வலியுறுத்தி வந்த மேற்குலக நாடுகளும் இத்தீர்வு திட்டத்தனையிட்டு திருப்தியடையவில்லை. சிறிலங்காவின் முதன்மை எதிர்க்;கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இடதுசாரி முன்னணி, மேலக மக்கள் முன்னணி போன்ற கட்சிகளும் இத்தீர்வுத்திட்டததை ஆதரிக்கவில்லை.

தமிழ் ஒட்டுக்குழுக்களும், இலங்கை தொழிலாளர் கொங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்ற மகிந்த அரசுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அமைப்புகள் மட்டுமே, இத்தீர்வுத்திட்த்தை வரவேற்றிருக்கின்றன. இந்த வரிசையில் இந்தியாவையும் சேர்த்துக் கொள்ளலாம். மேற்கண்ட அமைப்புக்கள் இந்தியாவின் செல்வாக்குக்கு உட்பட்டவை என்பதனால் இங்கு இந்தியாவின் ஆதரவு சற்று அதிகமாகவே வெளிப்படுகிறது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அமுலாக்கலில் கரிசனை செலுத்தாத இந்தியா தமிழ்மக்களிற்கு எந்தவிதத்திலும் திருப்திப்படுத்தாத ஒரு தீர்வுத்திட்டத்தை ஆதரித்து நிற்பதானது அவ்வொப்பந்தத்தை எதிர்த்தவர்களின் நிலைப்பாட்டை நியாப்படுத்துவதாக அமைகிறது.