இது பங்கேற்கவேண்டிய தருணம்

சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிக்கொண்ட சிலமணிநேரத்திலேயே இலங்கைத்தீவில் உள்ள மக்கள் அழிவுகளை சந்தித்துள்ளார்கள். மொனராகல மாவட்டத்தில் பயணிகள் பேருந்துமீது நடாத்தப்பட்ட தாக்குதலும், நேற்றய தினம் கிளிநொச்சி கனகபுரம் பகுதியிலுள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது நடாத்தப்பட்ட மோசமான விமானக்குண்டுத் தாக்குதல்களும் தீவு எதிர்நோக்கியுள்ள பாரிய மனித அவலத்தை கோடிகாட்டி நிற்கின்றன.

தாங்கள் போரில் வென்று வருகிறோம் என்ற நினைப்பு சிங்கள மக்களுக்கு இருக்கும்வரை சிறிலங்கா அரசின் போர் முயற்சிகளுக்கு அவர்கள் தமது ஆதரவினை வழங்குவார்கள். அங்கு குறைந்த எண்ணிக்கையாக இருக்கிற சமாதான ஆர்வலர்களினால் இந்நிலையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது.

ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவர்கள் என்ற வகையில் சிறிலங்கா அரசானது மேற்குலக அரசுகளினது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. சிறிலங்கா அரசின் இராணுவத்தீர்வு முயற்சியை கருத்தளவிலாவது ஏற்றுக்கொள்ள முடியாதநிலையில் அவை சிறிலங்கா அரசுடன் முரண்பட்டு நிற்பது தவிர்க்கமுடியாதது ஆகிவிட்டது. இருப்பினும் அவை உடனடியாக சிறிலங்கா மீது பாரிய அழுத்தங்களை மேறகொள்ளும் சாத்தியக்கூறுகள் தென்படவில்லை.

தாங்கள் வழங்கிய இராணுவ உதவிகளைக்கொண்டு சிறிலங்காப்படைகள் குறுகியகாலத்திற்குள் விடுதலைப்புலிகளின் போரிடும் வலிமையை அழித்துவிடும் என்பதில் மேற்குலக அரசுகளுக்கு ஒரளவு நம்பிக்கையிருக்கலாம். அங்கு போர் நீடித்துச் சென்றால் சிறிலங்கா மீதான அழுத்தங்கள் அதிகரிக்கப்பட்டு அது உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும். இப்போது சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கிவரும் அண்டைநாடுகளினால் அப்போது எதுவும் செய்ய முடியாத நிலையேற்படும்.

சர்வதேச சமூகத்தின் ஆதரவினை நியாயத்தின் பக்கம் திருப்புவதிலும், சிறிலங்கா அரசின் இராணுவத்தீர்வு முயற்சியை தோற்கடிப்பதிலும் உலகத் தமிழர்கள் தம்மாலான முயற்சிகளில் ஈடுபடவேண்டிய தருணம் வந்துவிட்டது. சிறிலங்கா அரசுக்கு பொருளாதார பலத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டுவந்தால் அதனை இனி நிறுத்திக் கொள்வோம்.

இவ்விடயத்தில் சிறிலங்கா அரசுக்கு வருவாயை பெற்றுக்கொடுக்கும் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவையை புறக்கணிக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள வேண்டுகோள் பொருத்தமான நடவடிக்கையாக உள்ளது. இதுபோன்ற போராட்டங்களுக்கு புலம்பெயரந்து தமிழர்கள் தங்களது முழு ஆதரவையும் நல்கவேண்டும்.