அழிவை நோக்கிச் செல்லும் சிறிலங்கா

இலங்கைத்தீவினைப் பொறுத்தவரை, 2008ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரனின் படுகொலையுடன் மலர்ந்திருக்கிறது. இவ்வாண்டு இது போன்ற அரசியல் கொலைகள் உட்பட மனிதவுரிமை மீறல்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இது வெறும் ஆருடம் அல்ல உண்மை நிலவரம் என்பதனை தொடர்ந்து வரும் நிகழ்வுகள் சுட்டிநிற்கின்றன.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்கா விலகிக் கொண்டதன் விளைவாக நோடிக் நாடுகளினைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் வெளியேற்றப்படவுள்ளனர். இந்த நகர்வுகள் மூலம் சமாதானத்திற்கான கதவுகளை இறுகச்சாத்தி மேற்குலகத்தின் முகத்திலடித்துள்ளார் மகிந்த இராஜபக்ச. இந்தியா, சீனா, யப்பான், பாக்கிஸ்தான் ஆகிய ஆசிய நாடுகளின் உதவியுடன்தான் மகிந்தவின் போர் முயற்சிகள் தொடரப்போகின்றன. மேற்குலகத்தினை முற்றாகப் புறக்கணித்துவிட்டு ஆசியநாடுகளின் உதவியில் தங்கியிருப்பது என்பது முன்னைய சிறிலங்கா தலைவர்கள் முயன்று பார்க்காத புதிய அணுகுமுறை.

மேற்குலகின் தலையீட்டை தவிர்த்துக் கொள்வதற்கு இந்தியாவும், சீனாவும் மகிந்தவுக்கு அணையாக இருக்கப்போகின்றன. இந்நிலையில் ஐ.நா. மனிதவுரிமை கண்காணிப்பாளர்களை அங்கு நிலைகொள்ள வைப்பது ஒன்றே மேற்குலகம் சிறிலங்காவிற்குள் காலு}ன்ற உள்ள ஒரே வழியாக உள்ளது.

இராணுவரீதியில் விடுதலைப்புலிகளை அழித்துவிடுவதன் மூலம் இனப்பிரச்சனையை முற்றாக ஒழித்துவிட முடியும் என்ற நம்பிக்கையிலேயே இந்த முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றியளிக்க போவதில்லை என்பதனை வரும் நாட்களில் உணர்ந்து கொள்ளககூடியதாக இருக்கும். இதனையே தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது  மாவீரர் தின உரையில் எதிரி தங்களது பலத்தை குறைத்து எடைபோடுவதாகக் குறிப்பிட்டார்.

மகிந்தவின் போர்முயற்சிகள் மூலம் சிறிலங்காவின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு செல்லப் போகின்றது.. சிறிலங்காவுக்கான பொருளாதார உதவிகளை மேற்குலகம் நிறுத்துமேயானால், மேற்குறிப்பிட்ட ஆசியநாடுகளிலேயே சிறிலங்கா தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். இவற்றில் யப்பான் தவிர்ந்த ஏனைய நாடுகள் நீணடகாலத்திற்கு நிதியுதவிகளை செய்யமாட்டா.

போரின் மூலம் தங்களால் தமிழர்களை வெல்லமுடியாது என்ற நிலை ஏற்படும்வரை சிறிலங்காவை அழித்தாவது தமிழருடன் மோதுவதனையே சிங்கள் மக்கள் விரும்புவார்கள். இந்த மனோநிலையில் மாற்றம் ஏற்படும் வரை, இலங்கைத்தீவு அழிவுப்பாதையில் செல்வதனை யாராலும் தடுக்;கமுடியாது என்பதே இப்போதுள்ள சோகம்.