மீண்டும் அலசுவாரம்

by:
மட்டைக்கிளப்பான்

சமீபத்தில் நாட்டைவிட்டும் பிறகு வந்து வீட்டைவிட்டும் வெளியில் இருக்கவேண்டி ஏற்பட்டதால் இந்தத் தொடரைச் சற்று இடைநிறுத்த வேண்டியேற்பட்டுவிட்டது.  இனி மீண்டும் தொடரலாமென நினைக்கிறேன். 

எதிர்வரும் நாட்களில் நமது மாவீரர்களை நினைவுகூரும் தேசிய எழுச்சி வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.  சென்ற ஒரு வருடத்திற்குள் நமது தேசத்தின் விடுதலைக்காக உழைத்த இரண்டு பிரதான குரல்கள் அடங்கி விட்டன.  முதலில் பாலா அண்ணையின் குரல் இயற்கையின் கோரப்பிடியால் அடக்கப்பட்டது.  சமீபத்தில்  பிரிகேடியர் தமிழ்ச்செல்வனை சிங்கள அரசு தனது வழiமையான வஞ்சனையினால் கொன்றது.  பல மாவீரர்களும் மறைந்துவிட்டார்கள்.

ஆனாலுமென்ன விடுதலைக்காகப் போடப்பட்ட பாதையில் எதிர்வரும் காலங்களில் வரப்போகும் சவால்களை எதிர்நோக்கியபடி ஈழத் தமிழினத்தின் புனித யாத்திரை தொடர்கின்றது. 

~துன்பமே இயற்கையெனும்  சொல்லை மறந்திடுவோம் இன்பமே வேண்டி நிற்போம் யாதும் அவள் தொழிலாம்.  நம்பினார் கெடுவதில்லை...|.

~சென்றதினி மீளாது... எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றெnழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனைக் குறித்தல்வேண்டா. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதைத்  திண்ணமுற இசைப்பீர்...|

என்று பாரதி பாடினான்.  அது ஈழத்தமிழர்களாகிய எமக்கும் பொருந்தும். 

இனி அடுத்துச் செய்ய வேண்டியது என்ன? என்பதைப் பற்றிச் சிந்தித்து எமது பாதையைச் செப்பனிடுவதற்காகவே ஒவ்வொரு வருடமும் மாவீரர் வாரம் தேசிய எழுச்சிநாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.  

மறைந்த மாவீரர்களைத் துயரத்தோடு நினைவுகூரும் அதேவேளை அவர்கள் எதற்காக எமது மண்ணில் தம்மை விதைத்தார்களோ அந்த இலட்சியத்தை நிறைவேற்ற தமிழ் மக்கள் அனைவரும் உறுதியெடுக்க வேண்டுமென்னும் மிக முக்கிய நோக்கமே தேசிய எழுச்சிவாரத்தின் பிரதான கருப்பொருளாகும். 

தேசிய எழுச்சிவாரம் வெறும் விடுதலையோடு நின்று விடப்போகும் ஒன்றல்ல.  அது காலங்காலமாக இனி வருங்காலங்களில் இவ்வுலகில் தமிழீழமும் தமிழீழ மக்களும் உள்ளவரை அனுஷ்டிக்கப்படப்போகும் புனிதவாரமாகும்.  வரலாற்றின் வளர்ச்சிப்போக்கில் தமிழனுக்கான தனித்த தமிழ்ஈழ நாட்டின் அரசியல், ராணுவ, நிர்வாக, பொருளாதார கட்டுமானங்களை உலகமுள்ளவரை மேம்படுத்துவதற்கான எல்லாவகை மூலோபாயங்களையும் நெறிப்படுத்தியும் திட்டமிட்டும் அடுத்த வருடம் வரை கொண்டு செல்வதற்காகவே தேசிய எழுச்சிவாரம் எமது நாட்டின் மக்களால் வருடாவருடம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

சிறீலங்கா, இந்தியா போன்ற நாடுகள் பிரித்தானியரின் ஆதிக்கத்திலிருந்து ஒரு குறித்த தேதியில் விடுதலை பெற்றதாகப் பிரகடனப் படுத்தப்பட்டபோது தாங்கள் தமது சுதந்திரப் பிச்சையைப் பெற்றுக்கொண்ட அந்த நாட்களைத் தமது விடுதலையைப் பெற்றுக் கொண்ட நாட்களாக எண்ணித் தூக்கிக் கொண்டாடுகின்றன.  அந்தச் சுதந்திரத்துக்காக  தியாகிகள் பலர் பட்டபாட்டை மறந்து பிச்சைவாங்கிய நாளைப் பெரிதாய்க் கணிக்கின்றன.

ஆனால்  தமிழீழதேசம்  சுதந்திரத்தை அப்படிப் பிச்சை வாங்கவுமில்லை இனிமேல் வாங்கப்போதுமில்லை. 

~சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கடையில் வாங்க...| என்று காசியண்ணன் சொன்னார்.   அது கடையிலோ பிச்சையாகவோ பெறப்படும் பொருளல்ல.  அது விடுதலையென்னும் ஆத்ம உணர்வு.  எண்ணற்ற போராளிகளின், நாட்டுப்பற்றாளர்களின் ஆத்மப் பரித்தியாகத்தால் படிப்படியாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கண்ணுக்குப்புலனாகாத ஆனால் நிதர்சனமான  சுதந்திரக்கோட்டை.  அதனுள்தான் தமிழீழமக்கள் இனிமேல் காலங்காலமாக வாழப்போகிறார்கள்.  ஏன்! இப்போதே வாழத் தொடங்கிவிட்டார்கள்.

எதிரியால் அதனை இனிக் கைப்பற்ற முடியாது.  ஏனெனில் அது ஒவ்வொரு தமிழீழக் குடிமகனதும் ஆதர்ச வாசஸ்தலமாகி வெகுநாளாகிவிட்டது.  மனதினுள் உறுதிப்பட்டுவிட்ட எமது ஆத்மார்த்த தாயகத்தை எந்தக் கொம்பனாலும் கைப்பற்றவோ கொள்ளையிடவோ முடியாது.  எந்த வல்லரசு வந்தாலும் எமக்குள் நிலைபெற்று உறுதியாகிவிட்ட தாயகக்கோட்பாடடை உடைத்தெறிய முடியாது.

அது ~தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்| என்னும் தாரக மந்திரத்தை உருப்போட்டு உருப்போட்டு ஒவ்வொரு தமிழ் மகனாலும் கட்டப்படுகிறது.

வெளியே தமிழீழத்தின் எல்லைகளாய், ஏனைய கட்டுமானப் பணிகளாய் அது பஞ்ச பூதவடிவில் விரிவுபட, ~தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்| என்னும் தாரகமந்திரமாய் நாதவடிவில் ஒவ்வொரு தமிழ் மகனின், மகளின் உள்ளத்திலும் அது அதிர்கின்றது.  இனி என்றுமே அழிந்து போகாத பஞ்சபூதக் கோட்டையாய் நெஞ்சில் மாறா நாதமாய் சுதந்திரத் தமிழீழம் உருவாகிவிட்டது.

பிச்சையெடுக்காமல் பிச்செடுத்த சுதந்திரக்காய் என்று பழுக்குமென ஏங்கிக் கிடக்காதீர்.  தானாப் பழுக்குமடா தம்பி அதற்கத் தகுதிவந்து விட்டதடா தம்பி.  ஆனா அதற்காக அடங்கிக் கிடக்காமல் துள்ளி எழுந்திடடா தம்பி வீண் தூக்கத்தை விட்டிடடா தம்பி நாம் துயர் மறந்தோம்  உன்றனையே நம்பி.

எமது நாட்டின் சுதந்திரத்துக்காகத் தம்மை விதைகுழியில் வீழ்த்திய அனைத்து மாவீரர்களுக்கும் நாட்டுப்பற்றாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் நமது அஞ்சலியைச் செலுத்துவோம்.  நமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.           

தொடருவம்.