எந்த வடிவத்தில் வந்தாலும் அது பயங்கரவாதமே ..

நியுயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 62வது கூட்டத்தொடரில் சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆற்றிய உரையிலிருந்து பெற்றதே இந்தத் தலைப்பு. எதிர்பார்த்தபடி, அங்கு அவர் குறிப்பிட்ட கருத்துக்கள் தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை சர்வதேசப் பயங்கரவாதத்துடன் இணைத்து தமது தவறுகளிலிருந்து தப்பிப்பதாய் அமைந்திருந்தன. சாதித்தது எதுவுமில்லாதவிடத்து, பொருளாதாரம், சமூக நியாயம், மனிதவுரிமை என எல்லா விடயங்களிலும் சரிந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டின் தலைவரிடமிருந்து நாம் அதிகமாக எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் சர்வதேசப் பயங்கரவாதம் என்ற பூச்சாண்டியைக் காட்டி தமது
மனிதவுரிமை மீறல்களை நியாயப்படுத்துவதை அனைத்துலக நாட்டு தலைவர்கள் பொறுத்துக்கொள்வது ஏற்படையதாக இல்லை. உலகத்தலைவர்களின் இந்த நிலைப்பாடே இன்று இலங்கைத்தீவின் மனித அவலங்களுக்கு காரணமாக அமைகிறது.

சர்வதேச விதிமுறைகளை எதனையும் மதிக்காத, தனது சொந்த நாட்டு மக்கள் மீது அரசபயங்கரவாதத்தை கட்டுவிழ்த்துவிடுகிற ஒருநாட்டின் தலைவர் உங்கள் முன் பௌத்த தத்துவங்களை போதித்துவிட்டுப் தப்பிப்போகிறார் எனின் ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகள் எதற்கு இருக்கின்றன என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. ஒரு தேசிய இனத்தின் அழிவுக்கு இது போன்ற சர்வதேச அமைப்புக்கள் துணைபோகுமாயின் அவை உலகில் உள்ள ஒடுக்கப்படும் மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும் நிலை ஏற்படும்.

பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அது பயங்கரவாதமே என்ற மகிந்தவின் கூற்றுடன் நாம் உடன்படுகிறோம். அது நியுயோர்க்கில் மேற்கொள்ளப்பட்டாலும், லண்டனில் மேற்கொள்ளப்பட்டாலும் ஏன் வன்னிபுனத்தில் செஞ்சோலை வளாகத்தின் மீது நடாத்தப்பட்டாலும், பாடசாலைகள், கோவில்கள், தேவாலயங்கள் மீது நடாத்தப்பட்டாலும் ஒன்றுதான்;. அரசு தமது மக்களின் மீது நடாத்துகிற பயங்கரவாதம் என்பது மட்டும் அவசியமான ஒன்றாக ஆகிவிடாது.

சர்வதேச பயங்கரவாதத்தை ஈழத்தமிழர்கள் நியாயப்படுத்தவில்லை அதற்கு ஆதரவும் வழங்கவில்லை. தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளின் தேசியபாதுகாப்பு விடயத்திலும் அவர்கள் முரண்படவில்லை. ஆனால் அவர்கள் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை தொடர்ந்தும் எல்லா வழிகளிலும்; எதிர்த்துக் கொண்டேயிருப்பார்கள்.

இந்நிலையில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மனிதவுரிமை மீறல்களை விளக்கி அவர்களது இறைமை மதிக்கப்படவேண்டும் என ஐ.நா. மாநாட்டு பேராளர்களை தமிழர் தலைமை அறிக்கை மூலம் வேண்டிக்கொண்டமை பொருத்தமான நடவடிக்கையாக அமைந்தது.