தடை நீக்கப்பட வேண்டும்!

இலங்கைத்தீவின் இனப்பிரச்சனைக்கு  இராணுவத்தீர்வு சாத்தியமில்லை என்பது மேற்கு நாடுகளின் வெளிப்படையான கருத்தாக இருந்து வருகிறது. இருப்பினும் சிறிலங்கா அரசு இராணுவத்தீர்வை நோக்கிச் செல்கின்றபோது அதற்கு இராணுவ, பொருளாதார உதவிகளை இந்நாடுகள் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

இன்று விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல்கள் தொடர்கின்ற நிலையில் படைவலுச்சமநிலை சிறிலங்கா அரசுக்கு சாதகமாக அமையவில்லை. இது நாட்டின் பாதுகாப்பையும் உள்நாட்டு பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. அதே போல் மேற்கு நாடுகளின் வர்த்தக நலன்களுக்கும் இது பாதிப்பாக அமைகிறது. மறுபுறத்தில் வான்புலிகளின் தாக்குதல்கள் இராணவ இலக்கு நோக்கியதாகவும் போர் விதிகளுக்கு உடபட்டதாகவும் இருப்பதால் அதனையிட்டு வெளிப்படையாக இந்நாடுகளால் அதிருப்தி தெரிவிக்க முடியவில்லை. மாறாக இவை இரண்டு தரப்பிற்கும் கொடுக்கும் அழுத்தங்களை அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளன.

விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமானவர்கள் எனக்கருதப்படுவோர் பிரான்ஸ், அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கைது செய்யப்பட்டு;ள்ளமை இதன் பக்க விளைவுகளாகவே தெரிகிறது. இவர்கள் தாம் வாழும் நாடுகளில் எவ்விதமான சட்டவிரோத செயல்களிலும்  ஈடுபடாத நிலையிலும்;, இங்கிருந்து விடுதலைப்புலிகளுக்கு சென்றடையும் உதவிகளை நிறுத்தும் நோக்கில், இக்கைதுகள் அமைந்துள்ளன.

இந்நிலையில் மேற்குலகினை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசு இறங்கியுள்ளது. அனைத்துக் கட்சி மாநாடு, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ள சிறு சிறு குழுக்களையும் பேச்சுவார்ததையில் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்துவது, மனிதவுரிமை மீறல்களை விசாரிக்க சனாதிபதி ஆணைக்குழு அமைப்பது என ஜே.ஆர். ஜயவர்தன காலத்து பழைய தந்திரங்களை கையாளுகிறது.

இவற்றின் தொடர்ச்சியாக மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா சுதந்திரக்கட்சி தீர்வுத்திட்டமொன்றை முன்வைத்துள்ளது. இந்தியாவின் பஞ்சாயத்து அமைப்பு முறையை ஒத்த கிராம சபை, மாவட்டசபைகள் மட்டத்தில் அதிகாரம் பகிர்நதளிப்பது என எந்த வகையிலும் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை தீர்க்காத, ஒரு திட்டமாகவே இது உள்ளது.

மேற்குநாடுகளின் அழுத்தத்தின்பிரகாரம் மீளவும் பேச்சுவார்ததை மேசையை நோக்கி சிறிலங்கா செல்லக்கூடும். அரசியல் ரீதியாக அங்கிகாரம் வழங்காமல் விடுதலைப்புலிகளுடன் சந்திப்புக்களை நடாத்த மேற்குநாடுகளின் பிரதிநிதிகளும் முன்வந்துள்ளனர். பேச்சுவாரத்தைகளில் கலந்து கொள்ளுமாறு அவர்களும் நிர்பந்திக்கப்படலாம். இந்நிலையில் விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கி அவர்களை சமதரப்பாக ஏற்றுக் கொள்ளுமாறு ஒரேகுரலில் நாம் வாழும் நாடுகளை வலியுறுத்த வேண்டும்.