ஒரு முடிவின் ஆரம்பம்

குடும்பி மலை காட்டுப்பிரதேசத்தைக் கைப்பற்றிக் கொண்டதுடன் கிழக்குப்பகுதியை முழுவதுமாக விடுதலைப்புலிகளிடமிருந்து விடுவித்துக் கொண்டதாக விழா எடுத்துக் கொண்டாடியுள்ளார் மகிந்த ராஜபக்ச. கிழக்கில் கிடைக்கப்பெற்ற வெற்றியானது தற்காலிகமானது என்பதனை விளங்கிக்கொள்ளாத முட்டாளாக அவர் இருப்பார் என நாம் நம்பவில்லை. இருப்பினும்  சிங்கள மக்களை முட்டாளாக்கி தன்னை சரித்திர நாயகனாகக் காட்டிக்கொள்ள விரும்பும் மகிந்தவுக்கு அரசியல் ஆதாயம் தேட இதை விட்டால் இனி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை.

1977ல் இனப்படுகொலைக் காலத்தில் ஜே. ஆர் ஜெயவர்தன அறைகூவல் விடுத்தது போன்று போரா – சமாதானமா எதற்கும் தயார் என மகிந்த டெயிலி நியுஸ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இச்செவ்வியானது சிங்களத்தலைவர்கள் வரலாற்றிலிருந்து எந்தப்பாடத்தையும் கற்கவில்லை, கற்கப்போவதுமில்லை என்பதனை எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமில்லாமல் நிருபித்துள்ளது. அமைதிப்பேச்சு, அதிகாரப்பரவலாக்கம், பேச்சுவார்த்தை மூலமான தீர்வு போன்ற மயக்க நிலைக்கு முடிவு கட்டி சிங்கள தேசத்தின் போர்வெறியை மகிந்த வெளிபடுத்தியுள்ளார். இதற்காக அவருக்கு தமிழினம் தனது நன்றியைத் தெரிவிக்கும், ஈழத்தமிழரின் சரித்திரத்தில் இந்தச் சாத்தானும் இடம்பெறும் என்பதனை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

நேற்றய தினம் மகிந்த நடாத்திய விழாவின் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் - போர் நிறுத்தம் என்பனவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்ட்டுள்ளதுடன், இறுதி ஈழப்போர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையின்போது ஆதிக்க வல்லரசுகளும், இணைத்தலைமை நாடுகளும் காட்டிய மெத்தனம் இந்த யுத்த முன்னெடுப்புக்கள் அவர்களது ஆசீர்வாதத்துடனயே நடைபெறுவதை உறுதிப்படுத்தியுள்ளது. யப்பானிய தூதுவரோ ஒரு படி மேல் சென்று இவ்விழாவில் பங்கு கொண்டுள்ளார்.  இந்நிலையில் அங்கு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு என்று ஒன்றை வைத்திருந்து தமிழ் மக்களை கோமாளியாக்கும் இந்நாடுகள் பற்றி என்னவென்று சொல்வது?  தங்களை இவ்விதம் வெளிபடுத்தியதற்கு அவர்களுக்கும் நன்றி சொல்லுவோம்.

1977ம் ஆண்டு தேர்தலில் முன்வைக்கப்பட்டு தமிழ் மக்களின் ஆணைபெற்ற தமிழீழக் கோரிக்கை முன்னைரைக்காட்டிலும் இப்பொழுது வலுப்பெற்றுள்ளது. கடந்த வாரம் லண்டனில் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் இக்கோரிக்கையே வலியுறுத்தப்பட்டது. இவ்வாரம் வோசிங்ரனில் நடைபெறவிருக்கும் பேரணியிலும் இதனையே முன்நிறுத்தப்படவுள்ளது.

தமிழீழம் தவிர வேறொரு பாதையையும் சிங்களம் விட்டுவைக்காத நிலையில் அதற்காக உழைப்பதே ஒரே மார்க்கமாக உள்ளது.