அண்மைக்காலமாக இலங்கை தீவின் அரசியல் விவகாரங்களில் பிரித்தானிய அரசு அதிக அக்கறை காட்டிவருவது தெரிந்ததே. செஞ்சோலை வளாகத்தின் மீது குண்டுத் தாக்குதல்களை நடாத்தி தமிழ் மாணவிகளை பலிகொண்ட சம்பவத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவுக்கு பயணம் செய்து அப்போதைய பிரதமர் ரோனி பிளேயரை சந்தித்து உiயாடினார். திரு. பிளேயர் தனது விடுமுறைகாலத்தில் வெளிநாட்டு தலைவர் ஒருவரை சந்தித்தது ஒரு முக்கியம்வாய்ந்த நிகழ்வாக இருந்தபேர்தும் அங்கு பேசப்பட்ட விடயங்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அண்மையில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடாத்தப்பட்ட இலங்கைதீவு தொடர்பான விவாதம், சுனாமி நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்தியமை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னமும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இவை எல்லாம் சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றன என தமிழர்கள் யாராவது நினைத்திருந்தால் அவர்களது நினைப்பில் மண்ணை போடுவதுமாதிரி அந்தச்சம்பவம் நடைபெற்றது.
சாந்தன் அல்லது சாந்தன் அண்ணா என தமிழர்களால் அழைக்கப்பட்ட பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தின் பொறுப்பாளர் திரு. அருணாசலம் கிருசாந்தகுமார், தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த திரு. கோல்ட்மன் லம்பேட் ஆகிய இருவரும் கடந்த மாதம் 21ம்திகதி வியாளக்கிழமை மாலை லண்டனில் நியு ஸ்கொடலண்டயார்ட்ஐ சேர்ந்த விசேடபொலிசாரால் கைது செய்யப்பட்டு மத்திய லண்டனிலுள்ள Paddington Green என்ற இடத்தில் பயங்கரவாதச் சந்தேகநபர்களை தடுத்துவைக்கும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வழமையாக பயங்கரவாத சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டால் பரபரப்பாகச் செய்திகளை வெளியிடும் பிரித்தானிய ஊடகங்கள் இவ்விடயத்தில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. இது ஒன்றே இககைதுகள் வெறுமனே ஒரு அரசியல் நகர்வு என்பதனை வெளிக்காட்டி நிற்கின்றது.
மாறாக சிறிலங்கா தூதாராலயத்திற்கு நெருக்கமான அல்லது அவர்களினால் இயக்கப்படும் இணையத்தளங்களோ இக்கைதுகள் நடைபெற்ற ஒருமணி நேரத்துக்கிடையில் இச்செய்தியை பகிரங்கப்படுத்தின. லண்டனில் வாழும் சிறிலங்கா புலனாய்வுப்பிரிவை சேர்ந்த சிங்களவர் ஒருவர் இக்கைதுகள் நடந்த சில மணி நேரத்திலேயே அதற்கான காரணங்களை தனது வழமையான சோடனைகளுடன் எழுதினார். அதில் கடந்த வருடம் லண்டன் ஹைட் பார்க் திடலில் நடைபெற்ற கறுப்பு ஜுலை நினைவுக் கூட்டத்தை கைது செய்யப்பட்டவர்கள ஒழுங்கு செய்திருந்ததாகவும் அதற்காகவே இக்கைதுகள் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதற்கு மறுநாள்டகூட பிபிசி ஊடகங்கள் இக்கைதுக்கான காரணத்தை பொலிசார் வெளியிடடவில்லை என தெரிவித்திருந்தன.
ஐந்து தினங்கள் கழித்து ஜுன் 27ம் திகதியே பிரித்தானிய காவல்துறை ஒரு பத்திரிகை குறிப்பை அனுப்பினார்கள் அதில் திரு. சாந்தன் அவர்களுக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுக்களும், திரு. லம்பேட் அவர்களுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பொதுவில் பிரித்தானியாவில் தடைசெய்யப்படுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாகவே இவ்விருவர் மீதும் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.
திரு. சாந்தனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்:
1) 2006 ஜுன் 1ம் திகதியிலிருந்து 2006 ஜூலை 26ம் திகதி வரையிலான காலப்பகுதியில் லண்டன் பிராந்தியத்தில் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செயவதற்கு, அக்கூட்டம் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவானது எனத்தெரிந்திருந்தும் உதவி செய்தமை.
2) 2006 ஜூலை 26ம் திகதி நடைபெற்ற அக்கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்க்கான ஆதரவை ஊக்கப்படுத்தும் வகையில் உரையாற்றியமை.
3) 2005 ஜனவரி 24ம் திகதி லண்டன் பிராந்தியத்தில் வைத்து 1500 பவுண்ஸ் பணத்தை பெற்றுக் கொண்டமை. இப்பணம் பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படுத்தப்படும் என்ற நியாயபூர்வமாக சந்தேகிக்கப்படுகிறது.
4) 2006 ஜனவரி 17ம் திகதியிலிருந்து – 2007 ஜுன் 22 காலப்பகுதியில் (அதாவது கைதுசெய்யப்படும் வரை) சக்திவாய்ந்த நீரடி யுத்தம், மற்றும் கடற்படை சம்பந்தமான விளக்க நூல்களை கையிருப்பில் வைத்திருந்தமையும், பதுங்கு குழிகள் கிண்டுவதற்கு பாவிக்கும் சவள்கள் 6, திசையறிகருவிகள் 9, உடல் காப்பு அங்கி ஒன்று போன்றவற்றை வைத்திருந்தமை. இவை பயங்கரவாதச் செயல்களுக்கு பாவிப்பதற்காக வைத்திருந்திந்தமைக்கான நியாயபூர்வமான சந்தேகம் உள்ளது.
5) 2005 ஜனவரி 23 - 2007 ஜுன் 22 காலப்பகுதியில் (அதாவது கைதுசெய்யப்படும் வரை) தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கததை சேர்ந்தவராக இருந்தமை அல்லது அதற்கு ஆதரவாகச் செயற்பட்டமை.
திரு. கோல்ட்மன் லம்பேட்டுக்கு எதிரான ஒரே குற்றச்சாட்டு:
1) 2006 ஜுன் 1ம் திகதியிலிருந்து 2006 ஜூலை 26ம் திகதிவரையிலான காலப்பகுதியில் லண்டன் பிராந்தியத்தில் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செயவதற்கு, அக்கூட்டம் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவானது எனத் தெரிந்திருந்தும் உதவி செய்தமை.
மேற்படி குற்றச்சாட்டுக்கள் 2000 ஆண்டு பிரித்தானியாவில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதச்சட்டத்தின் அடிப்படையில் பாரிய குற்றச்சாட்டுக்களாகும். இச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அது மனிதவுரிமைகளை, கருத்துச்சுதந்திரத்தை பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், பொதுவில் இச்சட்டத்தை பிரித்தானிய அரசியற்கட்சிகள் கட்சி பேதமின்றி ஆதரித்தன. மனிதவுரிமை அமைப்புக்கள்கூட இச்சட்டத்தையிட்டு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இஸ்லாமிய பயங்கரவாதிகளின் அச்சுறுதல்களிலிருந்து நாட்டை பாதுகாக்க இத்தகைய நடைமுறைகள் அவசியம் என்ற கருத்தே இன்றும் நிலவுகிறது.
இச்சட்டத்தை தொடர்ந்து 2001ம் ஆண்டில் சில வெளிநாட்டு தீவிரவாத இயக்கங்கள் தடைசெய்யப்பட்டவையாக பாராளுமன்றத்தின் மூலம் உள்நாட்டு அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டது. அதில் தமீழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் சேர்க்கப்பட்து. இருப்பினும் தமிழீழ விடுதலைப்புலிகள் விடயத்தில் இச்சட்டத்தை காவல்துறையினர் தீவிரமாக அமுல்படுத்தவில்லை என்றே கூற வேண்டும். விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராகவிருந்த திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கடந்த வருட இறுதியில் அவர் மரணிக்கும் வரை பிரித்தானியாவிலிருந்து வெளிப்படையாகச் செயற்பட்டார். இந்நிலையில் தமிழ் செயற்பாட்டாளர்கள் மீது இச்சட்டம் திடீரென பிரயோகிக்கப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே கருத வேண்டியுள்ளது. இலங்கைத்தீவு விவகாரத்தில் பிரித்தானியா சில அரசியல் நகர்வுகளை மேற்கொள்வற்கான முன்னேற்பாடாக இக்கைதுகள் அமைந்திருக்கலாம். அல்லது ஏற்கனவே தமிழ் செயற்பாட்டாளர்கள் அமெரிக்கா, பிரான்ஸ். அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றின் தொடர்ச்சியாக இக்கைதுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் என்பதனை, அதுவும் குறிப்பாக திரு.சாந்தன் அவர்கள் கைது செய்யப்படலாம் என்ற ஊகம் புலத்து தமிழர்கள் மத்தியில் பலவாரங்களாக நிலவிவந்தது. ஆகவே வெளிப்படையாகவும் பிரித்தானிய அரச அதிகாரிகள் தொடர்புகளை மேற்கொள்ளக்கூடிய வகையிலும் செயற்பட்டுவந்த இச்செயற்பாட்டாளர்களின் கைதுகள் அதிர்ச்சியூட்டுவனவாக இருக்கவில்லை. ஆனால் இலங்கைதீவு விவகாரத்தில் பிரித்தானியா நேர்மையான அணுகுமுறையை கடைப்பிடிக்கும் என்ற நம்பிக்கை இப்போது சிதறடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படியிருக்கும் என்ற குழப்பத்தில் இருக்கும் தமிழ் மக்களை மேலும் குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க சில தனிமனிதர்களும் அமைப்புகளும் புறப்பட்டிருக்கின்றன. தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களும் அதுசார்ந்த ஊடகங்களும் செய்திகளை திரித்து வெளியிட்டு வருகின்றன. அதுபோலவே தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்கள் என தங்களை காட்டிக் கொண்டவர்களும் தங்கள் முகமூடிகளை கழற்றிவிட்டு தமது பச்சோந்தித்தனத்தை காட்ட முற்பட்டுள்ளனர். சில ஊடகங்களோ திரு. சாந்தன் ஏதோ இரகசியமாக செயற்பட்ட பயங்கரவாதி போன்று அவர்பற்றிய கதைகளை எழுதுகின்றன. பதினேழு வருடகாலமாக முழு நேரமாக பொதுப்பணியாற்றி வரும் திரு சாந்தன் பற்றி இந்த ஊடகங்களிலிருந்து தமிழ்மக்கள் தெரிந்து கொள்வதற்கு புதினம் ஒன்றும் இருக்கப்போவதில்லை.
2001 ஆண்டில் பிரித்தானிய உள்துறை அமைச்சாரால் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட வெளிநாட்டு அமைப்புக்கள் பயங்கரவாத அமைப்புக்களாக பட்டியலிட்டபோது அதனை எதிர்த்து மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம் இருந்தும் விடுதலைப்புலிகள் மேன் முறையிடு செய்யவில்லை என விடுதலைப்புலிகளை மறைமுகமாக குற்றஞ்சாட்டுகிறது லண்டனில் இயங்கும் தமிழர் தகவல் மையம் (Tamil Information Centre) என்ற அமைப்பு. இதுவிடயமாக ஊடகக் குறிப்பு ஒன்றினை வெளியீட்டிருக்கும் இந்த அமைப்பு, ஒரு வேளை விடுதலைப்புலிகள் மேன் முறையீடு செய்திருந்தால் பயஙகரவாதப்பட்டியலிலிருந்து நீக்கப்படும் குறைந்தபட்ச சாத்தியக்கூறுகளாவது இருந்தனவா எனக்குறிப்பிடவில்லை.
பிரித்தானிய தமிழர் ஒன்றியத் தலைவரின் கைதுடன் நீதிக்கும் சமத்துவத்துக்குமான ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டம் மங்கிவிடப்போவதில்லை. புலம்பெயர்ந்த (மேற்கு) நாடுகளில் தமிழ் மக்களது அரசியற் போராட்ட வடிவங்கள் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பது காலத்தின் தேவையாக இருக்கிறது என்பதனை மறுப்பதற்கில்லை. அவை தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகளான தாயகம் - தன்னாட்சி – சுயநிர்ணய உரிமை என்பனவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கவேண்டும் என்பதில் தமிழர்கள் உறுதியாகவிருக்கிறார்கள். இதில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லை என்பதனை அவர்கள் தொடர்ந்து உணர்த்திக் கொண்டேயிருப்பார்கள்.
Recent comments
2 weeks 14 hours ago
2 weeks 2 days ago
5 weeks 19 hours ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
17 weeks 2 hours ago
17 weeks 3 hours ago
17 weeks 1 day ago
17 weeks 5 days ago