இலங்கைதீவின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணப் புறப்பட்டுள்ள ஈழவர்

by:
- கோபி -

ஈழப் புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்) அமைப்பின் தாபகரான திரு. இளையதம்பி இரத்தினசபாபதியை நினைவுகூருமாக மார்ச் 24ம் திகதி; “Sri Lanka at Ethnic Crossroad”  எனும் தலைப்பில் மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது.
லண்டன் பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாடு காலையில்  திரு. இரவிச்சந்திரா சுந்தரலிங்கத்தின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது.

சிறிலங்கா அமைச்சர் பசீர் சேகுதாவுத் மாநாட்டை ஆரம்பித்து வைப்பதாக இருந்;தபோதும், அவர் கலந்து கொள்ளவில்லை.  சேகுதாவுத்தை அழைத்ததுபற்றி ரவிச்சந்திரா விளக்கமளிக்கையில் ஈரோஸ் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினராகவிருந்த திரு. பாலகுமாரன் எவ்விதம் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்படுகிறாரோ அவ்விதம் சேகுதாவுத்தும் முஸ்லிம் கொங்கிரசில் இணைந்து செயற்படுகிறாரே தவிர அவர் இன்னமும் ஈரோஸ்காரர்தான் என்றார். (யாரேனும் ஈரோஸ்காரர்கள் இனவாத அமைப்பான பிரித்தானிய தேசியவாதக் கட்சியிலும் இணைந்துள்ளார்களோ தெரியவில்லை)

மாநாட்டின் முதல் அமர்வு “தமிழ்பேசும் மக்களும் அவர்களது உரிமைகளும்” என்ற தலைப்பில் செல்வி வசந்தி சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.  முதலில் பேராதனை பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் திரு. வெள்ளைத் தம்பி அமீர்தீன், “இஸ்லாம் மதத்தை சார்ந்த தமிழ் பேசும் மக்களும்; தமிழர் விடுதலைப்போராட்டமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். வடக்கு கிழக்கில் வாழும் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்கள், தமிழர்களோ அல்லது இஸ்லாமியத் தமிழர்களோ அல்ல அவர்கள் தனித்த இனம் என்பதை நிறுவுவதாக அவரது உரை அமைந்திருந்தது. அவர்கள் பேசுகின்ற மொழிகூட அரபுக்கலப்புடைய தமிழ்மொழி என .இஸ்லாமியர்களை வேறுபடுத்தினார். அவர் தொடர்ந்து பேசுகையில் 1915ம் ஆண்டு இலங்கைத்தீவில் நடைபெற்ற சிங்கள – முஸ்லிம் மக்களுக்கிடையிலான கலவரம் முதல் இன்று வரை நடைபெற்று வரும் அரசியல் நடவடிக்கைகளில் தமிழ்த் தலைவர்கள் சேர் பொன்னம்பலம் இராமநாதன் முதற்கொண்டு திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் வரை முஸ்லிம்களின் உரிமைகளை மதிக்கவில்லை என குற்றம் சுமத்தினார். அண்மைக்காலத்தில் விடுதலைப்புலிகளால் முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டதாகக் கூறப்படும் வன்முறைகள்பற்றி பட்டியலிட்ட அவர் இதே காலப்பகுதியில் முஸ்லீம் ஆயுதக்குழுக்களால் தமிழ் மக்கள்மீது (குறிப்பாக கிழக்கில்) நடாத்தப்பட்ட அட்டூளியங்கள் பற்றி எதும் குறிப்பிடவில்லை.


அடுத்து “தமிழ் பேசும் மக்களை அரசியல் ரீதியாக வரையறை செய்தல்” என்பதுபற்றி உரையாற்றிய திரு. இரவிச்சந்திரா சுந்தரலிங்கம். “தமிழ் ஈழம்”; என்ற பதமும் “ஈழம்” என்ற பதமும் அரசியல் நடைமுறையில் எவ்விதம் வேறுபடுகின்றன என விளக்ககமளித்தார். சுருங்கக்கூறின் புவியியல் ரீதியாகவும் தமிழ்த்தேசிய இனம் சார்ந்தும் தெளிவான வரையறையுடன் மண்ணின் சூழலுக்கும் நடைமுறை யதார்த்தத்துக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்ட தமிழீழ போராட்டத்தையும் வெறும் கொள்கை அடிப்படையில் (lofty ideals) லண்டனிலிருந்து தன் ஓய்வு நேரத்தில் ரவி முன்னெடுக்க விரும்பும் ஈழப்போராட்டத்துக்கும் உள்ள வேறுபாடுகளை விபரித்தார் எனலாம். தாயக விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக லண்டனில் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லக்கூடியவர் என ரவிமீது தமிழ் கல்வியாளர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பிருந்தது. ஆனால் அவர் இன்னமும் இலட்சியங்களை கட்டியணைத்தப்படி தரையில் கால்படாமல் நடக்கவிரும்புகிறார் என்பது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும்.


பேராதனைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சின்னத்தம்பி மலையக மக்கள் படும் இன்னல்கள், ஏனைய மக்களுடன் ஒப்பிடுகையில் அவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளமை போன்றவற்றை புள்ளி விபரங்களுடன் விபரித்தார்.

இம்மாநாட்டின் இரண்டாவது பகுதி உலக – பிராந்திய நோக்கில் மக்களின் தேவைகள் பற்றியதாகவிருந்தது. திரு. பேரின்பநாதன் தலைமையேற்ற இவ்வமர்வில், பேராசிரியர் மேகானந் தேசாய் உலகலமயமாக்கலில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள தேசிய விடுதலை மற்றும் புரட்சிகர அமைப்புக்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்திய உபகண்டத்தில் தேசிய இனங்கள் தங்களை வரையறை செய்து கொள்வதில் அடைந்து வரும் அடையாளச் சிக்கல்கள்பற்றி எடுத்துரைத்தார்.

இந்திய உளவு நிறுவனமான ‘RAW’ ல் புலனாய்வு அதிகாரியாய் பணியாற்றியவரான திரு. சந்திரசேகரன் உரையாற்றுகையில் அரசியல்-இராணுவப்பரப்பில் இன்று தோற்;றமளிப்பதைப் போன்று உலக அதிகார மையம் அமெரிக்க தலைமையிலான ஒரணியாக இல்லாமல் பல-துருவங்களாக உள்ளமையையும், இந்தியா எந்த அணியிலும் சேராமல் தமது தேசிய நலனுக்கேற்ப அவ்வப்போது வௌ;வேறு அணியில் சேர்ந்து கொள்வதாகவும் தெரிவித்தார். இந்தியாவுக்;குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களாக,  காஸ்மீர் பிரச்சனை, உள்நாட்டில் நக்சலைட்டுகளின் கிளர்ச்சி, மற்றும் பாக்கிஸ்தான் பங்களாதேஸ் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பொருளாதார அகதிகள் போன்றவற்றைக் குறிப்பிட்டார். வழமையாக அவரது SAAG (www.saag.org)
நிறுவனத்தை சேர்ந்த சகாக்களான ராமன், ஹரிகரன் போன்று விடுதலைப்புலிகளை இந்த பட்டியலில் அவர் சேர்க்கவில்லை. மேடை அறிந்து அவர் அவ்விதம் நடந்திருக்கலாம்.

இறுதியாக திரு. குகேந்திரன் ஆற்றிய உரையே இந்த மாநாட்டில் நடப்பு விடயங்களைத் தொட்டு நிகழத்திய ஒரேயொரு உரையாக அமைந்திருந்தது. பரஸ்பரம் நல்லுறவு இல்லாத நிலையில் இரு தேசிய இனங்களுக்கு இடையிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் இடைக்கால நிர்வாக சபையின்  அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில் உரை நிகழ்த்தியவர்கள் வேறுபட்ட கொள்கைகளையுடைய கல்வியாளர்கள் என அறிமுகப்படுத்தபட்டாலும், பெரும்பாலோனோர்; இம்மாநாட்டை ஒழுங்கு செய்த முன்னாள் ஈரோஸ்காரர்களின் யுளுயு வுஐஊ என்ற அமைப்பை சேர்ந்தவர்கள்.   போரின் தீவீரம் அதிகரித்து மக்கள் இன்னல்களை அனுபவித்துவரும் இந்நேரத்தில் மேலெழுந்தவாரியான இது போன்ற மாநாடுகள் அவசியந்தானா? என்ற கேள்வி எழுவது இயற்கையே. ஆனால் ஏற்பாட்டாளர்களை பொறுத்தவரை, புலம்பெயர்ந்த மக்களிடையே அவர்களுக்கு இன்னமும் செல்வாக்கு உள்ளது அவர்களையும் பொருட்படுத்திக் கொள்ளுங்கள் என்ற செய்தியுடன் சுயுறு சந்திரசேகரன் இந்தியாவுக்கு பறந்திருந்தால், அதுவே மாநாட்டின் வெற்றியாக அமையும்.