அண்மையில் மகிந்த இராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை தொடர்பில், தமிழ் ஊடகங்கங்கள்கூட அதிக அக்கறையுடன் கருத்துகள் தெரிவித்திருந்தன. ஆனால் இவ்வுரையினை பிரித்தானியாவில் இயங்கும் Bell Pottinger என்ற தனியார் பரப்புரை நிறுவனமே தயாரித்திருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. லண்டன் சிற்றி பல்கலைக்கழகத்தில் இயங்கும் The Bureau of Investigative Journalism என்ற அமைப்பு தமது புலனாய்வின் மூலம் இச்செய்தியினை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.
தமது இனவழிப்பு நடவடிக்கைகளை மறைத்து வெள்ளையடிக்கவும் மேலைத்தேச சந்தையில் சிறிலங்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான நுகர்வு, வெளிநாட்டு முதலீடு மற்றும் உல்லாசப்பயணிகளின் வருகை ஆகியவற்றை அதிகரிக்கவும், மேற்படி நிறுவனத்திற்கு வருடாந்தம் பெருந்தொகையான பணத்தினை சிறிலங்கா அரசாங்கம் வழங்கிவருவது ஏற்கனவே தெரிந்த செய்தி. இருப்பினும் இராசதந்திர விடயங்களிலும், நாட்டின் தலைவர் உரையை தயாரிக்கவும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றைப் பயன்படுத்துவது அரசியல்விடயங்களில் ஆர்வம் உள்ளவர்களின் புருவங்களை உயர்த்தியுள்ளது.
ஒருபுறம் வெளிநாட்டுத் தலையீடுகளை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, மனிதவுரிமை விடயங்கள் விடயத்தில் மேற்கத்தைய அமைப்புகளின் அறிவுறுத்தல்களை நிராகரிக்கும் சிறிலங்கா அரசு, அவற்றை எதிர்த்து பரப்புரை செய்வதற்கு வெளிநாட்டு பரப்புரை நிறுவனங்களில் தங்கியிருப்பது அதன் உண்மையான முகத்தை திரைநீக்கம் செய்துவைத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடும் ஒரு அரசாங்கத்திற்கு பரப்புரை செய்வதனை ஒரு அறம்சார்ந்த வணிக நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விடயத்தில் டீநடட Pழவவiபெநச நிறுவனத்தை கேள்விக்கு உள்ளாக்கும் மேற்படி ஊடக நிறுவனத்தின் செயல் வரவேற்கத்தக்கது. இச்செய்தியை வெளிக்கொணர்வதில் அந்நிறுவனம் பலத்த சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
அதிகாரவர்க்கத்தினரின் செல்வாக்குடைய பல மில்லியன் பவுண்ஸ் இலாபமீட்டும் ஒரு செயற்திறன் மிக்க பரப்புரை நிறுவனத்தின் பரப்புரையை எதிர்கொள்வது சிரமமானது என்பதனை மறுப்பதற்கில்லை. ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் பரப்புரை நடவடிக்கைகளை அதன் உள்நோக்கம் தெரியாமல் காவித்திரியும் தமிழ் ஊடகங்கள் இவ்விடயத்தில் கவனமெடுப்பது அவசியமானது.












